கார்த்திக்கும் திமுக பக்கம் திரும்புகிறாராமே?
சென்னை: யாராலும் கவனிக்கப்படாத கட்சிகளில் ஒன்று அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி.. அதாங்க, நடிகர் கார்த்திக்கின் கட்சி. இக்கட்சி வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக அணியுடன் இணைந்து, கருணாநிதியின் "மனதில் இடம் பிடிக்க" முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகராக இருந்து வந்த கார்த்திக் பின்னர் சரணாலயம் என்ற அமைப்பை தொடங்கினார். அந்த அமைப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக தென் மாவட்டங்களில் இந்த அமைப்பின் கூட்டங்களுக்கு கார்த்திக் வந்தபோதெல்லாம் வெள்ளம் போல கூட்டம் கூடியதை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இதையடுத்து அரசியலுக்கு வந்தார் கார்த்திக். கிட்டத்தட்ட விஜயகாந்த் அரசியலுக்கு வந்த சமயத்தில்தான் இவரும் அரசியலில் நுழைந்தார். 2006ல் அரசியலுக்கு வந்த இவர் முதலில் பார்வர்ட் பிளாக் கட்சியில் இணைந்து அதன் தமிழகத் தலைவரானார்.
2006 சட்டசபை தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சி 111 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் கார்த்திக் 2008ம் ஆண்டு தனியாக வந்து அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
இந்த கட்சி சார்பில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்ட அவர் படு தோல்வி அடைந்தார். கடந்த 2011 தேர்தலில் 29 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்தது.
இதையடுத்து 2014 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்தார். அந்த கட்சிக்காக தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டார். ஆனாலும் காங்கிரஸுக்கு ஒரு பெருமையும் கிடைக்கவில்லை.
தேர்தல் சமயத்தில் மட்டுமே அரசியல் குறித்து யோசிக்கும் கார்த்திக் இப்போது சட்டசபைத் தேர்தல் நெருங்கியுள்ளதால் மீண்டும் சீரியஸாகியுள்ளாராம். இப்போது அவர் திமுகவுடன் இணைய முடிவு செய்துள்ளாராம் (அவராக). அடுத்து திமுகவுடன் பேசி கூட்டணியில் சேரத் திட்டமாம்.
சில தொகுதிகளை திமுகவிடம் கேட்கவும் திட்டம் உள்ளதாம். ஆனால் சீட்டுக்குப் பதில் கருணாநிதி மனதில் இடம் வேண்டுமானால் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
எதுவாக இருந்தாலும் மார்ச் 6ம் தேதி நெல்லையில் நடைபெறும் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் கார்த்திக் முடிவெடுக்கவுள்ளாராம்.