படம் காட்டத் தயாராகிறார் 'தொப்பி' கார்த்திக்....!
தேனி: எங்களிடம் வீரமும் இருக்கிறது, விவேகமும் இருக்கிறது. நான் அனைத்து சமுதாய மக்களுக்கும் நன்மை செய்வேன். முதலில் தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றி எழுதுவோம். சினிமா பாணியில் சொல்லப் போனால் இது ‘டிரெய்லர்' தான். முழுப் படம் இனிமேல் தான் வரும் என்று அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவரான நடிகர் கார்த்திக் முழங்கியுள்ளார்.
தேர்தல் சமயத்தில் மட்டும் வெளியே வந்து எட்டிப் பார்க்கும் நூதனத் தலைவர் கார்த்திக். பேச்செல்லாம் பட்டையைக் கிளப்பும். ஆனால் வேட்பாளர் அறிவிப்பு முதல் போட்டியிடுவது வரை பெரும் அக்கப்போரை சந்திப்பார் கார்த்திக்.
அந்த வகையில் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் மறுபடியும் பீல்டுக்கு வந்துள்ளார் கார்த்திக். தேனிக்கு வந்த அவர் அங்கு நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
கார்த்திக்கின் பேச்சிலிருந்து...
அதான் வந்துட்டேன்ல.. இனி வறட்சி போய்ரும்
நான் வரும் போது இங்கு மழை இல்லை. வறட்சி நிலவுகிறது என்று கூறினார்கள். நாங்கள் வந்து விட்டோம். இனி மழை வரும். வறண்ட பூமி என்ற நிலை இல்லாமல் போகும். இது கடவுள் மேல் சத்தியம்.
அளவிட முடியாத வீரம்...
தமிழனின் வீரம் அளவிட முடியாதது. தமிழர்களின் வீரத்தை போல் உலகில் எங்கும் கிடையாது.
அதெப்படி நாங்க இல்லாம
மத்தியில் யார் வந்தாலும், நாங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது. அப்படி ஒரு நிலை வரும்.
அப்ப கேப்பான் இந்த கார்த்திக்...
அப்போது இந்த கார்த்திக் கேட்பான், என் மக்களுக்கு செய் என்று.
போதும் ஏமாந்தது
ஏமாந்தது போதும். இனி ஏமாற்றுபவர்கள் தான் ஏமாறப் போகிறார்கள். இறுதி மூச்சு இருக்கும் வரை உங்களை சுமை தூக்க விட மாட்டேன்.
சேச்சே.. எனக்குப் பயமெல்லாம் கிடையாது
எனக்கு பயம் கிடையாது. வீரனுக்கு ஒருமுறை தான் மரணம். கோழை தான் காலையில் கண்ணாடியை பார்க்கும் போதெல்லாம் சாவான்.
நல்ல செய்தி தர்றோம்.. ஒரே வாரத்தில்
நாடாளுமன்ற தேர்தல் குறித்து விரைவில் முடிவு செய்வோம். இன்னும் ஒரு வாரத்தில் நல்ல செய்தி வரும்.
ரெண்டும் இருக்கே...
எங்களிடம் வீரமும் இருக்கிறது, விவேகமும் இருக்கிறது. நான் அனைத்து சமுதாய மக்களுக்கும் நன்மை செய்வேன். முதலில் தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றி எழுதுவோம்.
ச்சும்மா டிரெய்லர்தாம்மா இது...
சினிமா பாணியில் சொல்லப் போனால் இது டிரெய்லர் தான். முழுப் படம் இனிமேல் தான் வரும். வெற்றி நமதே என்றார் கார்த்திக்.