அறிவாலயம் வருவதாக சொல்லி விட்டு மாயமான கார்த்திக்.. 9ம் தேதி செய்தியாளர்களைச் சந்திக்கிறார்!
சென்னை: நடிகர் கார்த்திக், திமுகவுடன் கூட்டணி வைக்க வருவதாக கூறி விட்டு பின்னர் வராமல் போனதில் ஒரு பின்னணி இருப்பதாக சொல்கிறார்கள். அதாவது உண்மையில் அவர் கூட்டணி குறித்துப் பேச அண்ணா அறிவாலயத்திற்குக் கிளம்பி விட்ட நிலையில் வழியில் அவர் திடீரென மறைந்துள்ளார். அதாவது அவரை வழிமறித்து கூட்டிச் சென்று விட்டதாக சொல்கிறார்கள்.
மேலும் திமுக பக்கம் போக வேண்டாம், அம்மா பார்த்துக் கொள்வார்கள் என்று கூறி அவரை திமுக பக்கம் போக விடாமல் தடுத்து விட்டார்களாம். இதனால் கிட்டத்தட்ட ஹவுஸ் அரெஸ்ட் போல ஆகி விட்டதாம் கார்த்திக்கின் நிலைமை.
தற்போது வரை வெளியில் சுதந்திரமாக தலை காட்ட முடியாமல் இருக்கிறாராம் கார்த்திக். ஆனால் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்து தனது நிலை குறித்து விளக்கத் திட்டமிட்டுள்ளாராம் கார்த்திக்.
எப்படி இருந்த கார்த்திக்
தங்கள் வீட்டு "தேவர் மகனாக" முக்குலத்தோர் மத்தியில் பிரபலமாக இருந்தவர் கார்த்திக். இப்போதும் கூட அவர் மீது முக்குலத்தோர் மத்தியில் நல்ல கிரேஸ் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் கதையாக தனது பெயரை தானே கெடுத்துக் கொண்டுள்ளார் கார்த்திக்.
திறமையான தலைவராக இல்லை
ஆரம்பத்தில் பார்வர்ட் பிளாக் கட்சியில் சேர்ந்தார் அதை கார்ப்பரேட் கம்பெனி ரேஞ்சுக்கு அவர் பாவிக்க ஆரம்பித்ததை பார்வர்ட் பிளாக் கட்சியினரால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதனால் கட்சியை விட்டு நீக்கி விட்டனர். ஒரு திறமையான தலைவராக மிளிரத் தவறி விட்டார் கார்த்திக்.
தனிக்கட்சி கண்டும்
அதன் பிறகு அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கினார் கார்த்திக். ஆனால் அவர் கட்சியாகவே பார்க்கவில்லை. ஏதோ லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் போல பாவித்து அவ்வப்போது திடீர திடீரென அறிக்கை விடுவது என்று இருந்து வருகிறார்.
ஒரு மாநாடு, போராட்டம், தர்ணா..ம்ஹூம்!
இந்தக் கட்சி சார்பில் இதுவரை ஒரு போராட்டமோ, தர்ணாவோ, மாநாடோ நடந்ததில்லை. கட்சிக்கு பொதுக்குழு, செயற்குழு இருக்கிறதா என்று கூட யாருக்கும் தெரியாது.
திமுக காட்டிய ஆர்வம்
இந்த நிலையில் வரும் தேர்தலில் கார்த்திக்கை கூட்டணியில் சேர்க்க திமுக ஆர்வம் காட்டியது. இதை கார்த்திக்கே கூட எதிர்பார்ககவில்லை. இதையடுத்து மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேச அறிவாலயம் வர முடிவு செய்தார் கார்த்திக்.
திடீர் மாயம்
சம்பவ நாளன்று கார்த்திக் வருகைக்காக ஒட்டுமொத்த மீடியாவும் அறிவாலயத்தில் கூடியிருந்தது. ஆனால் சொன்ன நேரமும் ஓடிப் போனது, காத்திருந்து பார்த்த ஸ்டாலினும் ஏமாந்தார். கார்த்திக் வரவே இல்லை.
வழியில் குறுக்கிட்ட சிலர்
உண்மையில் அன்றைய தினம் கார்த்திக் போயஸ் தோட்டத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து அறிவாலயம் கிளம்பியுள்ளார். ஆனால் வழியில் சிலர் அவரை தடுத்து கூட்டிச் சென்று விட்டதாக சொல்கிறார்கள்.
வெளியில் வருகிறார்
இந்த நிலையில வெளியில் வர முடிவு செய்துள்ளார் கார்த்திக். ஏப்ரல் 9ம் தேதி சனிக்கிழமை அவர் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார். அப்போது தனது நிலை, ஏன் திமுக அழைத்தும் போகவில்லை என்பது குறித்து அவர் விளக்கப் போகிறார்.