கார்த்திகை தீப விழா: சிவன் முருகன் ஆலயங்களில் கோலாகலம் - வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு
தமிழகம் முழுவதும் கார்த்திகை தீப திருவிழா தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிவ ஆலயங்களிலும் முருகன் ஆலயங்களிலும் தீபம் ஏற்றப்பட்டது. வீடுகளில் மக்கள் விளக்குகளை ஏற்றி வழிபட்டனர்.
Recommended Video
மதுரை: திருக்கார்த்திகை தீப திருவிழா தமிழகம் முழுவதும் இன்று கொண்டாப்பட்டு வருகிறது. கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர நாளில் திருவண்ணாமலையில் மகா தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. அதே போல போல தமிழகம் முழுவதும், சிவன், முருகன்ஆலயங்களில் கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக கொண்டாப்படுகிறது. திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபம் பார்த்த மக்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி இறைவனை வழிபட்டனர்.
முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் எந்த கோவிலிலும் இல்லாத காணக்கிடைக்காத முருகப்பெருமான் சாந்தமாக அமர்ந்த நிலையில் திருமண கோலத்தில் அருள்பாலிப்பது விஷேசமாகும்.
இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் திருவிழாக்கள் நடைபெற்றாலும் பங்குனி திருவிழா, தெப்பத் திருவிழா மற்றும் திருக்கார்த்திகை தீப திருவிழா ஆகிய 3 திருவிழாக்கள் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறும். இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீப திருவிழா டிசம்பர் 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தீப திருவிழா
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற நேற்று முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு நிகழ்ச்சியாக 10ஆம் தேதி காலையில் நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியாக மாலை 6 மணி அளவில் மலையிலுள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா என்று பக்தி பரவசத்தில் முழக்கமிட்டனர். இதனை தொடர்ந்து இரவு 7 மணி அளவில் 16 கால் மண்டபம் அருகே சொக்கப்பானை தீப காட்சி நடைபெற்றது. மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.
மலைக்கோட்டையில் தீபம்
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. மாலை 6 மணி அளவில் மலைக்கோட்டையின் நடுப்பகுதியில் உள்ள தாயுமானசுவாமி கோயிலில் இருந்து உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள உயரமான கோபுரத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. கோபுரத்தில் பிரமாண்ட செப்புக் கொப்பரையில் 300 மீட்டர் நீளமுள்ள பருத்தி துணியை திரியாக வைத்து, 900 லிட்டரில் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய் ஊற்றி தீபம் ஏற்றப்பட்டதை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
இன்று ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 3 நாட்கள் அணையாமல் எரியும்.
சொக்கப்பனை ஏற்றப்பட்டது
சென்னை கபாலீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை தீப திருவிழா கோலகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து விளக்கேற்றி வழிபட்டனர். கோவில் முன்பு சொக்கப்பனை காட்சி நடைபெற்றது. இதனை ஏராளமானோர் கண்டு தரிசனம் செய்தனர். சென்னை முழுவதும் உள்ள சிவ ஆலயங்களில் தீப திருவிழா கோலகலமாக நடைபெற்றது.
தீபத்திருவிழா கோலாகலம்
திருவண்ணாமலை அண்ணாலையார் கோவிலில் மலைமீது மகா தீபம் ஏற்றப்பட்ட நிகழ்வினை தொலைக்காட்சியில் கண்டவுடன் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி படையலிட்டு வழிபாடு நடத்தினர். ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் வீட்டுப்படிகளிலும் 27 இடங்களில் விளக்கேற்றி வைத்தனர். குடியிருப்புப் பகுதிகளில் தீபங்கள் ஜொலித்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. தீபம் ஏற்றப்பட்ட உடன் பல இடங்களில் சிறுவர்கள் பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர். தீபாவளி பண்டிகைக்குப் பின்னர் கார்த்திகை தினத்திற்குத்தான் பட்டாசுகளை வெடித்து சிறப்பாக தீபத்திருநாளை கொண்டாடினர்.