வாசன் ஹெல்த் கேர் நிறுவன பங்கு விற்பனை விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம்?
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு கடந்த மாதம் அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
சென்னை : சிபிஐ சோதனையில் சிக்கியுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது பங்குச்சந்தையில் ரூ. 45 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி என்று சொல்லப்படும் யூபிஏ 1 மற்றும் யூபிஏ 2 உள்ளிட்ட இரண்ட ஆட்சிக் காலத்திலும் சக்தி வாய்ந்த அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். நிதியமைச்சக பொறுப்பை கவனித்து வந்த இவரின் பதவியை பயன்படுத்தி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பல்வேறு முறைகேடான வகைகளில் சொத்துகளை சேர்த்தாக புகார்கள் எழுந்தன.
பங்குச்சந்தையில் ரூ.45 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிந்துள்ளது. வாசன் ஹெல்த் கேர் நிறுவனம் மூலமாக ரூ. 2 ஆயிரத்து 262 கோடி ரூபாய் பணத்தை வெளிநாடுகளில் இருந்து அன்னிய செலாவணி மோசடி செய்து பெற்றுள்ளதாக இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.
முதல்கட்ட சோதனை
இது தொடர்பாக ஏற்கனவே கார்த்தி சிதம்பரத்தின் வீடு, வாசன் ஹெல்த் கேர் நிறுவனம் மற்றும் அவர்களுக்கு சொந்தமான அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது குற்றச்சாட்டிற்கு முகாந்திரமாக சொல்லப்படும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்பட்டது.
அமலாக்கத்துறை நோட்டீஸ்
மேலும் இந்த அன்னிய செலாவணி மோசடி குறித்து விளக்கமளிக்குமாறு கார்த்தி சிதம்பரம், வாசன் ஹெல்த் கேர் நிறுவனத்திற்கு கடந்த மாதம் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. மோசடி தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்குமாறு அமலாக்கத்துறை கோரியது.
பெமா சட்டத்தின் கீழ் வழக்கு
அமலாக்கத் துறை அனுப்பியிருந்த நோட்டீசில், பங்குகள் விற்பனை செய்ததில் அன்னிய செலாவணி மேலாண்மைச் சட்டம் மீறப்பட்டிருப்பதாகவும், பங்கு பரிமாற்றங்களின் இறுதியில் கார்த்தி சிதம்பரம் பயனடைந்ததுபோல் தோன்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதில் தரவில்லை
இதே போன்று அட்வான்டேஜ் ஸ்ட்ரேடிஜிக் நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் நிர்வாக குழுவில் கார்த்தி சிதம்பரம் இடம்பெற்றுள்ளார். ஆனால் அன்னிய செலாவணி மோசடி வழக்கு குற்றச்சாட்டு குறித்து இது வரை கார்த்தி சிதம்பரம் விளக்கமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.