கார்த்தி சிதம்பரம் வழக்கு கடந்து வந்த பாதை!
Recommended Video
சென்னை: ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் சட்டவிரோதமாக அந்திய முதலீடு செய்ய கார்த்தி சிதம்பரம் உதவியதாக எழுந்த புகாரில் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் வெளிநாடு சென்று, இன்று சென்னைக்கு திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை திடீரென சிபிஐ கைது செய்துள்ளது.
இந்த வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்:
2015- ஆக. 24- கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனத்தின் இரு இயக்குநர்களுக்கு, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக, அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது.
2015, டிச.1- கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் அமலாக்கத்துறை ரெய்டுகள் நடத்தியது.
2016, மே.23- வெளிநாட்டில் உள்ள கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் குறித்த விசாரணையை அமலாக்கத்துறை ஆரம்பித்தது. வெஸ்ட் பிரிட்ஜ் மற்றும் அட்வான்டேஜ் செகோயா உள்ளிட்ட நிறுவனங்கள் விசாரணை வளையத்திற்குள் வந்தன. எனவேவ தொடர் ரெய்டுகள் நடத்தப்பட்டன.
2016, ஜூலை 5- ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு தொடர்பாக ஆவணங்களுடன் அமலாக்கத்துறை முன்னிலையில் கார்த்தி சிதம்பரம் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. கார்த்தி சிதம்பரத்தின் செஸ் மேலாண்மை சேவைகள் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனம் 2 லட்சம் டாலர்கள் பெற்றுள்ளது என்று, கூறப்பட்டது.
2017 ஜூன்: கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை சென்னை ஹைகோர்ட் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. கார்த்தி சிதம்பரம், சி.பி.என்.ரெட்டி, ரவி விஸ்வநாதன், மோகனன் ராஜேஷ் மற்றும் பாஸ்கரராமன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் லுக்அவுட் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டது.
2017 ஆகஸ்ட்: ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு அன்னிய முதலீடு அங்கீகாரம் வழங்கிய வழக்கு தொடர்பாக சிபிஐ முன்னிலையில் கார்த்தி சிதம்பரம் ஆஜரானார்.
2017 ஆகஸ்ட் 22- ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தனது மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய சென்னை ஹைகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் கோரிய நிலையில், டெல்லி ஹைகோர்ட் அல்லது பாட்டியாலா நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2017 ஆகஸ்ட் 24- கார்த்தி சிதம்பரத்திடம் 8 மணி நேரம் சிபிஐ விசாரணை நடத்தி 100க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பியது. இது முழுக்க ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான கேள்விகளாக அமைந்திருந்தது.
2017, செப்.11- கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது.
2017, நவ.16- வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரம் அனுமதி கேட்ட நிலையில், அதுகுறித்து பதில் அளிக்க சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
2017-நவ.12- டிசம்பர் 1-10 வரை இங்கிலாந்து செல்ல கார்த்தி சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.
2018- ஜன. 12- ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
2018, ஜன. 29- அமலாக்கத்துறை கார்த்தி சிதம்பரத்திற்கு மீண்டும் புதிதாக சம்மன் அனுப்பியது.
2018, ஜன. 31- கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான லுக்அவுட் நோட்டீசில் சென்னை ஹைகோர்ட் முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.
2018, பிப்ரவரி- ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை மீண்டும் கார்த்தி சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பியது.
2018 பிப். 16- கார்த்தி சிதம்பரத்திற்கு நெருக்கமானவரும், அவரின் ஆடிட்டருமான பாஸ்கர் ராமன் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார்.
2018- பிப். 17- சிபிஐ எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல சென்னை ஹைகோர்ட் அனுமதி வழங்கியது.
2018- பிப். 22- தனக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று, உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.
2018, பிப். 28: சென்னை விமான நிலையத்தில் வைத்து சிபிஐயால் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.