ஜோசப் விஜயும், ஜூனைத் ஜமீலாவும் இந்தியர்களே.. எச்.ராஜாவுக்கு கரு.பழனியப்பன் பதிலடி
மெர்சல் திரைப்படம் குறித்த ஹெச்.ராஜா பதிலுக்கு இயக்குநர் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை : மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி, டிஜிட்டல் இந்தியா குறித்தான வசனங்கள் மத்தியரசை விமர்சிப்பது போல் இருப்பதால் அதனை நீக்க வேண்டும் என தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இது தமிழகத்தில் மட்டுமில்லாது தேசிய அளவிலும் பெரிய விவாதாத்தைக் கிளப்பி உள்ளது. இந்நிலையில் பா.ஜ.க.,வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, மெர்சல் திரைப்படம் குறித்தும் அதில் நடித்து இருந்த விஜய் குறித்தும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து இருந்தார். ஜோசப் விஜய் என விஜய் மதத்துடன் இணைத்து ராஜா டிவிட் செய்திருந்தார்.
ஏற்கனவே, பொதுமக்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவளித்து வருகின்றனர். குறிப்பாக ட்விட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கி பெரிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
ஜோசப் விஜய், ஜுனைத், ஜமீலா, ஜனநாதன், ஜக்கம்மா,என எல்லோரும் சேர்ந்திருப்பதுதானேஇந்தியா.?இல்லையெனில் சொல்லிவிடு,நாங்கள் தமிழர்களாய் வாழ்வோம்.”
— கரு பழனியப்பன் (@karupalaniappan) October 20, 2017
தற்போது மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாக இயக்குநர் கரு.பழனியப்பன் ட்வீட் செய்துள்ளார். அதில், 'ஜோசப் விஜய், ஜூனைத் ஜமீலா, ஜனநாதன், ஜக்கம்மா என எல்லோரும் சேர்ந்து இருப்பது தானே இந்தியா ? இல்லையெனில் சொல்லி விடுங்கள்; நாங்கள் தமிழர்களாய் வாழ்வோம்' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.