திருவாரூரில் மீண்டும் போட்டியா? கூட்டணி அமைவது சாத்தியமா? கருணாநிதி விளக்கம்
சென்னை: திமுக அனுமதித்தால் திருவாரூரில் மீண்டும் போட்டியிடுவேன் என்றும் சட்டசபை தேர்தலில் கூட்டணி என்பது வரவேற்கத் தகுந்த ஒன்று என்றும் அக்கட்சித் தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
திருவாரூரில் இன்று செய்தியாளர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி:
கேள்வி : கரு அறைக்குள் முதலமைச்சர் படத்தை வைத்து பூஜை செய்திருக்கிறார்களே; அதைப்பற்றி?
பதில்: தமிழ்நாட்டில் மூட நம்பிக்கைக்கு ஒரு அளவு இல்லை என்பதற்கு இது ஒரு அடையாளம்.
கேள்வி: வரக் கூடிய சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைவது சாத்தியமா?
பதில்: கூட்டணி வெறுக்கத் தக்க ஒன்று அல்ல. கூட்டணி வரவேற்கத் தகுந்த ஒன்று. கூட்டணிக்கு வர விரும்புகின்ற கட்சிகளை உதறித் தள்ள மாட்டோம். எந்தக் கட்சியானாலும் ஜனநாயகத்திற்கு வெற்றித் தேடித் தருமேயானால், அந்தக் கட்சிகளை தாராளமாக நாங்கள் வரவேற்போம்.
கேள்வி: 2016 ஆண்டு தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எதை மையப்படுத்தியிருக்கும்?
பதில் : ஜனநாயகத்தை மையப்படுத்தி இருக்கும்.
கேள்வி : தேர்தல் அறிக்கையில் மின் கட்டணக் குறைப்பு இருக்குமா?
பதில் : தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கும் என்று இப்போது வெளியிடுவது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயலாகும். விரைவில் வெளியிடப்படவிருக்கின்ற தேர்தல் அறிக்கையில் அதைப் பற்றி விளக்கமாகச் சொல்லப்படும்.
கேள்வி: விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று மாணவிகள் இறந்தது பற்றி உங்கள் அறிக்கை வந்துள்ளது. நீதி விசாரணை வேண்டுமென்று சொல்லியிருக்கிறீர்கள். எந்த அளவுக்கு தமிழக அரசு இந்தப் பிரச்சினையில் நடவடிக்கை எடுக்கும் என்று நினைக்கிறீர்கள்?
பதில்: தமிழக அரசைப் பொறுத்தவரையில் இதே போன்ற கொலைகள் தமிழகத்திலே நடைபெற்றிருந்தாலுங்கூட, அதைப்பற்றி கவலைப்பட்ட அரசு அல்ல.
கேள்வி: கடந்த நாலே முக்கால் ஆண்டுக் கால தமிழக அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது?
பதில்- சொல்லக் கூடிய அளவுக்கு ஒன்றும் இல்லை.
கேள்வி: மீண்டும் நீங்கள் திருவாரூரில் போட்டியிடுவீர்களா?
பதில்: திருவாரூர் மக்கள் சொன்னால், கழகம் அனுமதித்தால், போட்டியிடுவேன்.
கேள்வி : சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது?
பதில்: வெற்றி வாய்ப்பு நன்றாகத்தான் இருக்கிறது.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.