“கொலை”க்”கஞ்சா” மாநிலமாகத் மாறி வருகிறது தமிழகம் - கருணாநிதி
சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் பத்து பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மேற்கோள் காட்டி, "கொலை"க்"கஞ்சா" மாநிலமாகத் தமிழகம் மாறி வருகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கேள்வி :- தமிழகத்தில் ஒரே நாளில் பத்து பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகச் செய்தி வந்துள்ளதே? ஆட்சியினர் என்னதான் செய்கிறார்கள்? பத்து பேரா? இருங்கள் எண்ணிப் பார்க்கிறேன்.
1. நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகே அ.தி.மு.க. கிளைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அவருடைய தம்பி மாரியப்பன் ஆகியோர் பட்டப் பகலில் பேருந்தில் வந்தபோது அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். 3. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே 6ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி காளீஸ்வரி கழுத்து அறுக்கப்பட்டு கொலை. 4. தேவகோட்டை அருகே கீழவயலைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் படுகொலை. 5. தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே ரமேஷ் என்பவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 6. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பெட்ரோல் பங்க் எதிரே ஸ்ரீதர் என்பவர் அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 7. மதுரை சக்கிமங்கலத்தைச் சேர்ந்த முத்துமாணிக்கம் என்பவர் அரிவாள்களால் வெட்டிக் கொலை. காதல் தகராறில் இந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறதாம். 8. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மனோஜ் குமார் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, காரை ஏற்றிக் கொலை. 9. விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே தாமரைக்குளத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் முத்தையா என்பவர் கொலை. 10. சென்னை அடையாறு ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு பத்து பேர் ஒரே நாளில் "அம்மா"வின் ஆட்சிப் பரிபாலனத்தில் படுபாதகமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வளவு ஏன்? தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில், உயர் நீதிமன்ற வளாகத்திலேயே பாதுகாப்பையெல்லாம் மீறி வழக்கறிஞர் மணிமாறன் என்பவர் சரமாரியாக வெட்டப்பட்டுள்ளார்.
13-7-2016 அன்று மட்டும் சென்னை எழும்பூர் புகைவண்டி நிலையத்தில் 95 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டி.பி. சத்திரத்தில் 110 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் வெட்கக் கேடு! தமிழகக் காவல் துறையில் டி.ஜி.பி.யாக பணியாற்றிய, தற்போது மாநிலத் தலைமை தகவல் ஆணையர் பொறுப்பில் அ.தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஐ.பி.எஸ். அதிகாரி ராமானுஜம் அவர்களே சேலம் சென்ற போது தாக்கப்பட்டதாகவும் செய்தி வந்துள்ளது. அதையெல்லாம் தொகுத்து நாளிதழ் ஒன்றில் "தமிழ்நாடு கொலை நாடு" என்றே தலைப்பிட்டு கட்டுரை தீட்டியுள்ளது. மொத்தத்தில் "கொலை"க்"கஞ்சா" மாநிலமாகத் தமிழகம் மாறி வருகிறது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.