திமுக கோட்டைக்கு போவதை தடுத்த கொங்குமண்டலத்தில் களையெடுப்பு தொடக்கம்!!
சென்னை: சட்டசபை தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திமுகவில் நிர்வாகிகள் களையெடுப்பு தொடங்கியுள்ளது. திமுகவுக்கு படுதோல்வியைத் தந்து ஆட்சிக் கனவைத் தகர்த்த கொங்குமண்டலத்தில் இருந்து இந்த களையெடுப்பு தொடங்கியிருப்பதால் அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
சட்டசபை தேர்தலில் 172 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 89 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 60 இடங்களில் காங்கிரஸ் 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 என 9 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது.
கொங்கு மண்டலம் எனப்படும் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர் ஆகியவற்றில் திமுக படுதோல்வியை சந்தித்தது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் ஒன்றில் கூட திமுக வெல்லவில்லை. சேலத்தில் உள்ள 11 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில்தான் திமுக வென்றது.
படுதோல்வி தந்த கொங்கு
கோவையின் 10 தொகுதிகளிலும் ஒரே ஒரு தொகுதிதான் திமுகவுக்கு கிடைத்தது. திருப்பூரில் 2, நாமக்கல்லில் 1, கிருஷ்ணகிரியில் 3, தருமபுரியில் 2, கரூரில் 1, நீலகிரியில் 2 என சொற்ப அளவிலான தொகுதிகள்தான் திமுகவுக்கு கிடைத்தது. கொங்கு மண்டலத்தை கோட்டைவிட்டதால் கோட்டையை கைப்பற்ற முடியாமல் போனது திமுக.
கதறியழுத மீனா லோகு
தேர்தல் முடிந்த கையோடு சென்னையில் நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் கட்சியினரின் உள்ளடி வேலைகள் பற்றி பலரும் பகிரங்கமாகவே பேசினர்... குறிப்பாக கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் மீனா லோகு, நான் வெற்றி பெறும் நிலையில்தான் இருந்தேன்; ஆனால் திமுக நிர்வாகிகள் எனக்கு ஒத்துழைப்பு தரவில்லை... இதனால் 7,000 வாக்குகளில் தோல்வியைத் தழுவினேன் என வெளிப்படையாக சொன்னார். அதற்கு முன்னதாக கருணாநிதியை சந்தித்த போது மீனா லோகு கதறி அழ கருணாநிதியும் அழுதுவிட்டார்.
இப்படியும் டீலிங்
பல தொகுதிகளில் அதிமுக அமைச்சர்களுடன் திமுக மாவட்ட செயலர்கள் மறைமுக டீலிங் வைத்து செயல்பட்டும் இருக்கின்றனர். வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டவர் கவிதா. அதிமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் வீரமணியிடம் சுமார் 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்தார். வீரமணியின் சகோதரர் அழகிரியோ தி.மு.க., ஒன்றிய செயலராக இருந்தார். அவர் வீரமணிக்கு ஆதரவாக மறைமுகமாக பணியாற்றியதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒன்றிய செயலர் பதவியில் இருந்து அண்மையில் அழகிரி நீக்கப்பட்டார். இப்படி பல தொகுதிகளில் இருந்து புகார் வந்து குவிந்தது.
களத்தில் குதித்த திமுக
இதனிடையே ஆட்சியைக் கைப்பற்றிய அதிமுக அதிரடியாக 15 மாவட்ட செயலர்களை நீக்கி நடவடிக்கை எடுத்தது. இதனால் திமுகவிலும் மாவட்ட செயலர்கள் மீது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்பட்டது. முதல் கட்டமாக கொங்கு மண்டல திமுகவினரிடம் விசாரணை நடத்தப்பட்டு இன்று அதிரடியாக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலர் பொறுப்பில் இருந்து காந்திசெல்வன், கோவை வடக்கு மாவட்ட செயலர் பொறுப்பில் இருந்து வீரகோபாலும் நீக்கப்பட்டுள்ளனர். இதேபோல் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் பெ.கி. துரைராஜூம் நீக்கப்பட்டுள்ளார்.
பழையன...புதியன
நாமக்கல்லைப் பொறுத்தவரையில் நீண்டகாலமாகவே காந்திசெல்வன் மீது திமுகவினர் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். கிழக்கு மாவட்ட செயலர் பொறுப்புக்கு தகுதியான வேறுநபரே இல்லையா என்பதுதான் நாமக்கல் திமுகவினரின் ஆதங்கமாக இருந்தது. தற்போது காந்திசெல்வனைத் தூக்கிவிட்டு ராசிபுரத்தைச் சேர்ந்த இளங்கோவனை மாவட்ட செயலராக்கியுள்ளது திமுக மேலிடம். இது நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுகவினரை உற்சாகமடைய வைத்துள்ளது.
பார்முலாவை கைவிடனும்
கோவை வடக்கு மாவட்ட செயலர் பொறுப்பில் இருந்து வீரகோபாலை தூக்கியதற்கு பட்டாசு வெடித்து கொண்டாடும் மனநிலையில்தான் உள்ளனர் திமுக. தற்போது முத்துசாமியை அந்த இடத்துக்கு தேர்வு செய்திருந்தாலும் 'கவுண்டர்' சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை மாவட்ட செயலராக்குவது என்ற பார்முலாவை நீண்டகாலமாக கடைபிடித்து வருவதற்கு முற்றுப்புள்ளி வைத்தால்தான் கோவையில் திமுக தலையெடுக்க முடியும் என தலையால் அடித்துக் கொள்கின்றனர் அக்கட்சி தொண்டர்கள்.
தொடரும் அதிரடி
நெல்லையில் மேற்கு மாவட்ட செயலர் பெ.கி. துரைராஜ் மீதும் ஏகப்பட்ட புகார்கள் அறிவாலயத்தில் குவிந்திருக்கிறது. இதனால் அவர் தூக்கியடிக்கப்பட்டு சிவபத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தையும் நெல்லை திமுகவினர் கொண்டாட்டத்துடன் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். தேர்தல் தோல்வி தொடர்பாக தொடர்ந்தும் திமுக மேலிடம் விசாரணைகளை நடத்தி வருவதால் அடுத்தடுத்து அதிரடிகள் பாயும் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.