முஸ்லிம்களுக்கு எதிரான மத்திய அமைச்சர்களின் பேச்சுகள்... மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்- கருணாநிதி
சென்னை: முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை உமிழும் பேச்சுகளை வெளிப்படுத்தி வரும் மத்திய அமைச்சர்கள் மீது பிரதமர் மோடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கை:
கேள்வி : 20-3-2016 அன்று திருச்சியில் நடைபெறும் திராவிடர் கழக, சமூக நீதி மாநாட்டில் நீங்கள் கலந்து கொள்கிறீர்களா?
கருணாநிதி: கடந்த மாதமே திராவிடர் கழகத் தலைவர் வீரமணி என்னை நேரில் சந்தித்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒப்புதல் பெற்றிருந்தார். மீண்டும் 14-3-2016 அன்றிரவு என்னைச் சந்தித்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவசியம் வரவேண்டுமென்று கூறியதோடு, என் வீட்டின் முன் இருந்த செய்தியாளர்களிடம் அதை உறுதிப்படுத்திவிட்டுச் சென்றார்.
ஆனால் எனது உடல் நிலை தற்போது பயணத்திற்கு உகந்ததாக இல்லை. அதிலும் நேற்று காலையில் என்னைச் சந்தித்த குடும்ப மருத்துவர் கோபால் அவர்கள், தற்போது பயணம் எதையும் மேற்கொள்ள வேண்டாமென்று வலியுறுத்தினார். அதற்குப் பிறகுதான் திருச்சி மாவட்டக் கழகச் செயலாளர் நேருவை அழைத்து நிலைமையைக் கூறியதோடு, ஆ.ராஜாவையும் பெரியார் திடலுக்கே அனுப்பி, வீரமணியை நேரில் சந்தித்து சம்மதிக்கச் செய்து, எனக்குப் பதிலாக, கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலினை அந்த நிகழ்ச்சியிலே கலந்துகொள்ளும்படி கூறியிருக்கிறேன்.
அதனால்நான் அந்த நிகழ்ச்சியிலே கலந்து கொள்ளாததைப் பொறுத்தருளுமாறு திராவிடர் கழகத் தோழர்களையும், திருச்சி பகுதியைச் சேர்ந்த தி.மு. கழக உடன்பிறப்புகளையும் கேட்டுக் கொள்கிறேன். அனைவரையும் தேர்தல் பிரச்சாரத்தின் போது நேரில் சந்திக்கின்றேன்.