அபரிதமான லஞ்ச நடவடிக்கைகளால் முடங்கிய நெடுஞ்சாலை துறை
கேள்வி: அ.தி.மு.க. ஆட்சியில் தேசிய நெடுஞ்சாலைகள் துறைகளைப் பற்றிய நடவடிக்கைகள் எவ்வாறு இருந்தன என்று விரிவாக "டைம்ஸ் ஆப் இந்தியா" ஆங்கில இதழில் செய்தி வெளியாகியுள்ளதே?
கருணாநிதி: அ.தி.மு.க. ஆட்சியில், முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் பல்வேறு துறைகளின் பிற்போக்கான செயல்பாடுகள் பற்றி பக்கம் பக்கமாக நாளேடுகளிலும், வார இதழ்களிலும் வரும் செய்திகளைப் படித்திருப்பீர்கள். இதோ! "டைம்ஸ் ஆப் இந்தியா" நாளேட்டில்
14-3-2016 அன்று வெளிவந்த செய்தி!
"In the past five years, only 30 km of roads were upgraded to National Highways in Tamil Nadu. The National Highways Authority of India could have widened at least 10 times that in the past five years, had the State Government supported them, NHAI officials say." (தமிழ்நாட்டில் கடந்த ஐந்தாண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் 30 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே சீரமைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் ஒத்துழைப்பு முழுமையாக இருந்திருக்குமேயானால், கடந்த ஐந்தாண்டுகளில் பத்து மடங்கு அளவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தமிழக நெடுஞ்சாலைகளைச் சீரமைத்திருக்க முடியும் என்று தேசிய நெடுஞ் சாலைகள் துறை ஆணையத்தின் அலுவலர்கள் தெரிவித்திருக்கிறார்கள்)
"We could have added at least 300 km in these five years, if we had the support of the State Government, said a Senior Official from NHAI" (கடந்த ஐந்தாண்டுகளில் மாநில அரசாங்கத்தின் ஆதரவு இருந்திருக்குமானால், குறைந்தபட்சம் 300 கி.மீ. நீள அளவுக்குச் செப்பனிட்டுச் சேர்த்திருப்போம் என்று தேசிய நெடுஞ்சாலைகள் துறை ஆணையத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்)
2011ஆம் ஆண்டு அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் சட்டப் பேரவையில் வைத்த மானியக் கோரிக்கையில், தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை, தமிழகத்தில் 4,974 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள் இருப்பதாகத் தெரிவித்தது. ஆனால் அண்மையில் வைத்த மானியக் கோரிக்கையில், 30 கி.மீ. கூடுதலாக அதாவது 5,004 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமே இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் அதிகாரிகள் கூறுகையில், சாலைகளை விரிவாக்கம் செய்யும்போது, நில ஆர்ஜிதம் செய்ய ஒத்துழைப்பு இல்லாமை, காவல் துறை பாதுகாப்புத் தராமை போன்றவையும், மாநிலத்தில் நிலவும் அபரிமிதமான லஞ்ச நடவடிக்கைகளும் சாலை அபிவிருத்தித் திட்டங்களைப் பாதித்துள்ளன என்றும் தெரிவித்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட ஒரு சில தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களைக் கூற வேண்டுமானால், சென்னை - திருப்பதி, திருச்சி - கரூர், திருச்சி - சிதம்பரம், விழுப்புரம் - பாண்டிச்சேரி - நாகப்பட்டினம், விக்ரவாண்டி - தஞ்சை - கன்யாகுமரி. சென்னை - திருப்பதி சாலையில், ஆந்திர மாநிலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பணிகள் முடிந்த போதிலும், தமிழகத்தைச் சார்ந்த பகுதிகளில் பணிகள் நடைபெறாமல் உள்ளன என்றும் அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் மிக முக்கியமான சாலைகள் சீரமைப்பில் அ.தி.மு.க. அரசு ஐந்தாண்டுகளில் காட்டிய ஆர்வத்திற்கு இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு!