தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதால்மின்வாரியத்துக்கு பல்லாயிரம் கோடி இழப்பு
கேள்வி: மின்வாரியத்தில் 7 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு எப்படி வந்தது என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் நாகல்சாமி கூறியிருக்கிறாரே?
கருணாநிதி: தமிழ்நாடு மின் வாரியம், சொந்த மின் நிலையங்கள், மத்திய மின் நிலையங்கள், தனியார் மின் நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து குறுகிய கால மற்றும் நீண்ட கால மின் கொள்முதல் மூலம் மின் தேவையைப் பூர்த்தி செய்கிறது. மின்வாரியம், மின் கொள்முதல் செய்ய முடிவு செய்தவுடன், "டெண்டர்" கோரவும், விலை நிர்ணயம் செய்யவும், தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம், முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.
மின் சட்டம், 62வது பிரிவின்கீழ் ஆணையம், மின்சாரம் வாங்க அனுமதி வழங்கும். ஆனால், தமிழ்நாடு மின் வாரியம், ஆணையத்தின் அனுமதி பெறாமலேயே தன்னிச்சையாக, சட்டத்திற்குப் புறம்பாக 2011 முதலே அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்து வருகிறது.
2012இல் தனியார் நிறுவனங்களிடம், குறுகிய காலத்திற்கு, 1,200 மெகாவாட் மின் கொள்முதல் செய்ய, மின் வாரியம் முடிவு செய்தது. அப்போது, மத்திய மின் நிலையங்களில் ஒரு யூனிட் மின் உற்பத்திச் செலவு 3 ரூபாய்க்குக் கீழே இருந்தது. மின்வாரிய டெண்டரில் பங்கேற்ற தமிழக நிறுவனங்கள், ஒரு யூனிட், 5.15 ரூபாய்க்கு வழங்க விலைப் புள்ளி வழங்கின. இந்த விலை அதிகம் எனக் கருதிய மின் வாரியம், அந்த டெண்டரை ரத்து செய்து, மறு டெண்டர் கோரியது.
அதில், பழைய விலையை விட ஒரு யூனிட் 5.50 ரூபாய் என்ற அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கியது. இவ்வாறு குறுகிய கால ஒப்பந்தத்தில் மட்டும், அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதால், வாரியத்திற்கு 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள காயன்குளத்தில் என்.டி.பி.சி. நிறுவனத்திற்குச் சொந்தமான எரி வாயு மின் நிலையம் உள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், ஆணையத்தின் அனுமதி இல்லாமல், 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்காக, அந்த மின் நிலையத்தில் இருந்து, ஓராண்டுக்கு, மிக அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியது. இதனால் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டது.
அ.தி.மு.க. ஆட்சியில் தற்போது மின்வாரியம், ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனில் இருப்பதற்கு, தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதுதான் காரணம். அப்படி வாங்கியது, அதிக அளவுக்குக் கொள்ளை அடிப்பதற்குத்தான் என்று மின்சார வாரிய ஊழியர்களே கவலையோடு பேசிக் கொள்கிறார்கள்.