மத்திய அமைச்சர்களின் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை உமிழும் பேச்சுகள் மீது நடவடிக்கை தேவை
கேள்வி: மத்திய பா.ஜ.க. ஆட்சியில், பொறுப்பில் இருப்பவர்களில் சிலர், சிறுபான்மையின மக்கள் மீது தொடர்ந்து வெறுப்பைக் காட்டுகிறார்களே?
கருணாநிதி: அது மதச்சார்பற்ற ஓர் அரசுக்கு நல்லதல்ல! ஓய்வுபெற்ற நீதிபதிகள் பி.பி. சாவந்த், ராஜிந்தர் சச்சார், பி.ஜி. கோல்சே பாட்டீல், ஹாஸ்பெட் சுரேஷ், ஐ.பி.எஸ். அதிகாரி ஜுலியோ ரிபெய்ரோ, முன்னாள் ஐ.ஜி. எஸ்.எம். முஷ்ரிப், மூத்த வழக்கறிஞர்கள் இக்பால் சாக்ளா, ஜனக் துவாரகாதாஸ் மற்றும் பலர் கையொப்பமிட்டு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இதுபற்றி விரிவாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
அந்தக் கடிதத்தில், மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களில் சிலர் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நாட்டு மக்களில் ஒரு பகுதியினருக்கு எதிராக, குறிப்பாக முஸ்லீம் சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக அச்சுறுத்தும் விதத்தில் வெறுப்பை உமிழும் வண்ணம் பேசி வருகிறார்கள். மத்திய இணை அமைச்சர் ஒருவர், முஸ்லீம்களை எச்சரிக்கிறோம் என்று மிரட்டியும், அவர்களை ராட்சதர்கள் என்றும், ராவணனின் வழித்தோன்றல்கள் என்றும் கூறி இறுதி யுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
இது அரசமைப்புச் சட்டத்தின் 14, 19, 21, 25 பிரிவுகளுக்கு எதிரானதாகும். எனவே உச்ச நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்தச் சான்றோர் அனைவரும் தெரிவித்திருக்கிறார்கள்.
இத்துடன் முஸ்லீம் மக்களுக்கு எதிராக மத்திய அமைச்சர்கள் கத்தரியா, வி.கே. சிங், சாத்வி நிரஞ்சன் ஜோதி, கிரிராஜ் சிங், முக்தார் அப்பாஸ் நக்வி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோகி ஆதித்யநாத் சாக்சி மகாராஜ், அமித் ஷா, மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆகியோரின் வெறுப்பை உமிழும் பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்களையும் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இது அலட்சியப் படுத்தக்கூடிய கருத்தல்ல; மிகுந்த கவலைக்குரியது; பிரதமர் உரிய நடவடிக்கை எடுப்பாரென்று எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.