அழகிரி என்று எனக்கு ஒரு பிள்ளையே இல்லை.. கருணாநிதி ஆவேசம்
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் பொய்யானது எனத் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
மேலும் மு.க.அழகிரியை தான் மறந்து வெகு நாட்களாகி விட்டது என்றும், அப்படி ஒரு மகனே தனக்கு இல்லை என்றும் கருணாநிதி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று திமுக பொருளாளரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின் கட்சியில் தனக்குள்ள அனைத்துப் பொறுப்புகளையும் ராஜினாமா செய்ததாக மதியம் தகவல் வெளியானது. ஆனால், இது தொடர்பாக திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
இதனால் ஸ்டாலின் வீட்டு வாசலில் செய்தியாளர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தை மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். மேலும், ஸ்டாலின் ராஜினாமாவை கருணாநிதி ஏற்கக் கூடாது என அவர்கள் கோஷமிட்டனர்.
அதனைத் தொடர்ந்து, கட்சித் தலைமை ஏற்றுக் கொள்ளாததால் ஸ்டாலினின் ராஜினாமா வாபஸ் பெறப்பட்டதாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் தேரிவித்துள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த கருணாநிதி, ‘ஸ்டாலின் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் பொய்யானது. ராஜினாமா செய்ய முன்வந்த ஸ்டாலின் எனது அறிவுரையை ஏற்று முடிவை மாற்றிக் கொண்டார். தேர்தல் தோல்வி குறித்து கட்சியின் உயர் மட்ட செயல் திட்டக் குழு கூடி விவாதிக்கும். சமீபத்திய தேர்தல் தோல்விக்கு ஊடகங்களே காரணம் என விளக்கமளித்துள்ளார்.
மு.க.அழகிரி ஸ்டாலின் ராஜினாமா குறித்து கருத்து தெரிவித்துள்ளது குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, அவரை நான் மறந்து வெகு நாட்களாகி விட்டது. அவரைப் பற்றிப் பேச நான் விரும்பவில்லை. அப்படி ஒரு பிள்ளையே எனக்கு இல்லை. அழகிரி திமுகவில் இருந்த போதும் 2,3 முறை திமுக தோல்வியடைந்துள்ளது என்றார் கருணாநிதி.