தமிழகத்தில் எழுத்தாளர்கள் மீது தொடர் தாக்குதல்: கருணாநிதி கண்டனம்
சென்னை: தமிழகத்தில் எழுத்தாளர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அ.தி.மு.க. ஆட்சியில் எழுத்தாளர்கள் தாக்கப்படுவது தொடர் கதையாகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பெருமாள்முருகன் என்ற எழுத்தாளர், "மாதொருபாகன்" என்ற நாவல் எழுதியது பற்றி பிரச்சினைகள் எழுந்து, அந்த எழுத்தாளரே மனம் நொந்து, "எழுத்தாளன் பெருமாள் முருகன் செத்து விட்டான், இனி அற்ப ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்" என்று கூறிவிட்டு படைப்புலகிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்.
அவருக்கு ஆதரவாக தமிழகப் படைப்பாளிகள், "எந்தக் கருத்தையும் விமர்சிக்கவும் எழுதவும் எவருக்கும் உரிமை உண்டு, கருத்துரிமையைக் காப்போம்" என்று குரல் கொடுத்தார்கள். பெருமாள் முருகன் சென்னை உயர் நீதி மன்றத்தில் பிறகு தாக்கல் செய்த மனுவில், தான் அவ்வாறு எழுதியதற்குக் காரணம், மாவட்ட வருவாய்த் துறை அதிகாரி தன்னைக் கட்டாயப்படுத்தியது தான் என்றும், எழுத்தாளனின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டு மென்றும் கோரியிருந்தார்.
தலைமை நீதியரசர் எஸ்.கே. கவுலும், நீதியரசர் எம்.எம். சுந்தரேசும் இந்த வழக்கில் மூன்று வாரத்திற்குள் தமிழக அரசு உள்ளிட்ட 14 பேர் பதிலளிக்க வேண்டுமென்று நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் கரூர் மாவட்டம், புலியூரைச் சேர்ந்த எழுத்தாளர் புலியூர் முருகேசன் எழுதிய ஒரு சிறுகதைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். பிரச்சினைகள் மேலும் பெரிதாக ஆகாமல், அரசும், காவல் துறையும் அமைதியை ஏற்படுத்த முயற்சிப்பார்கள் என்று நம்புகிறேன்.
அதே நேரத்தில் எழுத்தாளர்களின் கருத்துச் சுதந்திரம் காப்பாற்றப்படவும், அவர்கள் தாக்கப்படாமல் பாதுகாக்கவும் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.