மிரட்டிக் கொண்டிருந்த "புலி" வந்தே விட்டது: கருணாநிதி
சென்னை: மின்கட்டணம் 15 சதவீதம் உயர்த்தப் பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"புலி வருகிறது!" - "புலி வருகிறது!" என்று கடந்த சில மாதங்களாக மிரட்டிக் கொண்டிருந்த "மின் கட்டண உயர்வு" உண்மையில் வந்தே விட்டது.
இந்த மின் கட்டண உயர்வு பற்றி 12-12-2014 தேதிய "இந்து" ஆங்கில நாளேடு, "மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்குள்ளேயே கடுமையான பிளவு - ஒழுங்கு முறை ஆணையத்தின் உறுப்பினரே ஆணையத்தின் பெயரால் யாரோ ஒருவர் மின் கட்டண உயர்வுக்கான உத்தரவைப் பிறப்பிக்கிறார்" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள செய்தியில், ஒழுங்கு முறை ஆணையத்தின் உறுப்பினர் நாகல்சாமி அவர்களே, கட்டண உயர்வு குறித்து நாங்கள் எப்போதும் விவாதித்தது கிடையாது. ஒழுங்குமுறை ஆணையத்தின் எந்தக் கடிதத்திற்கும் மின்வாரியம் பதிலளிக்க வில்லை என்றெல்லாம் கூறியதாக தெரிவித்திருக்கிறது.
இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, இந்த மின் கட்டண உயர்வு ஒழுங்கு முறை வாரியத்தின் முழு ஒப்புதலையே பெறாமல், தன்னிச்சையாக அரசால் வலியுறுத்தப்பட்டு ஒழுங்கு முறை வாரியத்திலே உள்ள ஒரு சிலரால் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளதோ என்று தோன்றுகிறது. இரண்டாவது முறையாக தற்போது உயர்த்தப் பட்டுள்ள இந்த மின் கட்டண உயர்வை அ.தி.மு.க. அரசு முழுமையாகத் திரும்பப் பெற வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன். ''
இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.