தமிழகத்தை திராவிட இயக்கங்கள் குட்டிச்சுவராக்கி விட்டதா? வெங்கையா நாயுடுவுக்கு கருணாநிதி கண்டனம்
சென்னை: தமிழகத்தைத் திராவிட இயக்கங்கள் குட்டிச்சுவராக்கிவிட்டன என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை தங்கசாலை மணிக்கூண்டு அருகில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:
தமிழகத்தைத் திராவிட இயக்கங்கள் குட்டிச்சுவராக்கிவிட்டன என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். அவரை நல்லவர் என்று நினைத்தேன். அவர் பேச்சில் வல்லவராகி இவ்வாறு கூறியுள்ளார். ஆனால், வெங்கையா நாயுடு தமிழகத்திலேயே பெரும்பாலும் வசித்துக் கொண்டுதான் இப்படிப் பேசியுள்ளார்.
குடிநீர் வாரியம்
குடிநீர்வாரியம் திமுக ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. அந்தத் தண்ணீரைக் குடித்து தாகத்தைத் தீர்த்துக் கொண்டுதான் வெங்கையா நாயுடு குறை கூறியுள்ளார். தமிழகத்துக்காக திமுக ஆட்சியில் எண்ணற்ற சாதனை திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம்.
போலீஸ் கமிஷன்
இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் செய்யாத நிலையில் காவல்துறைக்கு என்று ஆணையம் அமைத்தோம். போக்குவரத்துக் கழகத்தை அரசுடைமையாக்கினோம். கை ரிக்ஷா இழுப்பதை ஒழித்து, இலவச சைக்கிள் ரிக்ஷா வழங்கினோம்.
இடஒதுக்கீடு
பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம் கொண்டு வந்தோம். பிற்படுத்தப்பட்டோருக்கு 31 சதவீத இடஒதுக்கீடும், தாழ்த்தப்பட்டோருக்கு 18 சதவீத இடஒதுக்கீடும் கொடுத்தோம். தொழிலாளர் தினமான மே 1-ந் தேதியைச் சம்பளத்துடன் கூடிய விடுமுறையாக அறிவித்தோம். விவசாயத்துக்கு இலவச மின்சாரம் அளித்தோம். பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை சட்டத்தைக் கொண்டு வந்தோம். அரசு வேலைவாய்ப்பில் மகளிருக்கு 30 சதவீத இடஒதுக்கீடு அளித்தோம்.
தமிழ் தாய் சிலை எங்கே?
சொன்னதைத்தான் செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம்'', கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்குச் சிலை அமைத்தோம். அதைவிட பெரிய சிலையை தமிழ்த்தாய்க்கு மதுரையில் ரூ.100 கோடியில் அமைக்கப்போவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியதை, மதுரைக்குப் போனபோது தேடிப் பார்த்தேன். அது கிடைக்கவே இல்லை.
மோனோ ரயில்
மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வந்தோம். இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தபோது, மோனோ ரயில் திட்டம்தான் சிறந்தது என்றார் ஜெயலலிதா. இப்போது மெட்ரோ ரயில் திட்டத்தையே செயல்படுத்தப் போவதாகச் சொல்லியுள்ளார். மெட்ரோ ரயில் வந்துவிட்டது; மோனோ ரயில் போய்விட்டது.
அண்ணா நூலகம்
இந்தியாவிலேயே இதுபோன்ற நூலகம் இல்லை எனும் அளவுக்கு அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தைக் கொண்டு வந்தோம். அதை முடக்குவதற்கு அண்ணா பெயர் கொண்ட கட்சியின் தலைவரான ஜெயலலிதா பல முயற்சிகள் மேற்கொண்டார். நீதிமன்றத்தின் மூலம் நூலகத்தை மீட்டுள்ளோம். புதிய தலைமைச் செயலகம் மருத்துவமனையாக ஆக்கப்பட்டுள்ளது.
செம்மொழி துறை முடக்கம்
செம்மொழி தகுதி தமிழுக்கு என்னால் கிடைக்கப் பெற்றது என்பதால் எந்தவித ஆராய்ச்சியும் நடைபெறாமல் அந்த துறையே முடங்கியுள்ளது. சமச்சீர் கல்வித் திட்டம், திமுக ஆட்சியில் வந்தது என்பதால், அதையும் செயல்படுத்த மறுத்தார் முதல்வர் ஜெயலலிதா. நீதிமன்றத்தின் மூலம் சமச்சீர் கல்வி நிறைவேற்றப்பட்டது. இப்படி தமிழகத்துக்கு எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். நீங்கள் திமுகவுக்கு ஆதரவுத் தரத்தான் போகிறீர்கள். நாங்கள் ஆட்சிக்கு வரத்தான் போகிறோம்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.