அறிவாலயத்தில் இருந்து புறப்பட்ட போது கண்ணீர் விட்டு அழுத கருணாநிதி!
திமுக தலைவர் கருணாநிதி அறிவாலயத்தில் இருந்து புறப்பட்ட போது கண்ணீர் விட்டு அழுத புகைப்படம் வைரலாகியுள்ளது.
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி அறிவாலயத்தில் இருந்து புறப்பட்ட போது கண்ணீர் விட்டு அழுததால் தொண்டர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஓராண்டுக்கும் மேலாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். காவேரி மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலைக்குறித்து பல்வே வதந்திகள் பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரது புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வந்தன.
முரசொலி வந்த கருணாநிதி
அண்மையில் முரசொலி பவளவிழாவை முன்னிட்டு கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்துக்கு வந்தார் கருணாநிதி. அங்கு அமைக்கப்பட்டிருந்த புகைப்படக்கண்காட்சியை பார்வையிட்ட அவர் புறப்படும் போது தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.
கொள்ளுப்பேரன் திருமணம்
இதைத்தொடர்ந்து கருணாநிதியின் கொள்ளுப்பேரனான மனோ ரஞ்சித் மற்றும் விக்ரம் மகள் திருமணம் கடந்த அக்டோபர் மாதம் கோபாலபுரம் இல்லத்தில் நடைபெற்றது. இதனை கருணாநிதி நடத்தி வைத்தார்.
வாசல் வரைவந்தார்
இதைத்தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் தினந்தந்தியின் பவளவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மோடி கருணாநிதியை சந்தித்தார். பின்னர் வாசலில் கூடியிருந்த தொண்டர்களை பார்த்து கருணாநிதி கையசைத்தார்.
அறிவாலயம் வந்த கருணாநிதி
இந்நிலையில் நேற்று திடீரென அறிவாலயத்திற்கு வந்தார் கருணாநிதி. இரவு 8 மணிக்கு மேல் கோபாலபுரம் வீட்டிலிருந்து கார் மூலம் வந்த கருணாநிதி அங்கு சிறிது நேரம் இருந்தார்.
கண்ணீர்விட்ட கருணாநிதி
அவரது அறைக்கு சென்ற கருணாநிதி அங்கு கூடியிருந்த தனது மகள் செல்வி உள்ளிட்டோரை பார்த்து புன்னகைத்தார். பின்னர் இரவு 9 மணிக்கு மேல் அங்கிருந்து புறப்பட்ட கருணாநிதி கண்ணீர் விட்ட அழுதார்.
கண்களை துடைத்துக்கொண்டார்
பின்னர் தனது கர்சீப்பால் கண்களை துடைத்துக்கொண்டு அவர் புறப்பட்டார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அறிவாலயத்திற்கு வந்ததை நினைத்து அவர் ஆனந்த கண்ணீர் விட்டிருக்கலாம் என அவரது தொண்டர்கள் சிலிர்த்து வருகின்றனர்.
வைரலாகும் போட்டோ
கருணாநிதி அழுதது அவரது தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கண்களை துடைத்துக்கொள்ளும் போட்டோ வைரலாகியுள்ளது.