ஆக்கப்பூர்வ திட்டங்கள் என்றால் அதிமுகவினருக்கு அலர்ஜி - கருணாநிதி சாடல்
சென்னை: ஆக்கப்பூர்வ திட்டங்கள் என்றால் அதிமுகவினருக்கு அலர்ஜி என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நவீன நீர் வழிச் சாலைத்திட்டம் என்பது "பவர் கிரிட்" போன்றது. தேவையில்லாதபோது நீரைத்தந்துவிட்டு, தேவையானபோது எடுத்துக்கொள்ளலாம். வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரைக் கொண்டு வளம் கொழிக்க வைக்கலாம். கோதாவரியிலிருந்து ஆண்டு தோறும் சராசரியாக 3 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் வீணாகக் கடலுக்குப் போகிறது. கர்நாடகாவில் வெறும் 419 டிஎம்சி தண்ணீருக்கு நாம் முட்டி மோதுகிறோம்.
ஆனால், அவர்கள் ஆண்டு தோறும் சராசரியாக 2 ஆயிரம் டிஎம்சி தண்ணீரைக் கடலில் விடுகிறார்கள். முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தப் போராட வேண்டியிருக்கிறது. ஆனால் கேரளத்தில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 2400 டிஎம்சி தண்ணீர் கடலுக்குப்போகிறது
வெள்ள அபாயத்தைத் தடுப்பதற்கும், வெள்ள நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுத்து வறட்சிப் பகுதிகளுக்கு நீரை எடுத்துச் செல்வதற்கும், மாநிலத்திற்குள் பாயும் நதிகளை இணைக்கும் திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக, திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டது.
திருச்சிக்கு அருகே மாயனூரில் காவிரியின் குறுக்கே கட்டளை கதவணைத் திட்டம், தாமிரபரணி - கருமேனி ஆறு - நம்பியாறு இணைப்புத் திட்டம், பெண்ணையாற்றுடன் செய்யாற்றை இணைக்கும் திட்டம் ஆகிய திட்டங்கள் தொடங்கப்பட்டன. திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் என்பதால், தற்போது அதிமுக ஆட்சியில் அந்தத் திட்டங்களுக்கு என்ன கதி ஏற்பட்டதோ? இந்த நிலையில், ஏ.சி.காமராஜ் வெளியிட்டுள்ள நவீன நீர் வழிச் சாலைத்திட்டத்தை, அதிமுக அரசு பரிசீலிக்குமா என்பது சந்தேகம்தான்! ஆக்கபூர்வமான திட்டங்கள் என்றால்தான் அதிமுக ஆட்சியாளர்களுக்கு "அலர்ஜி" ஆயிற்றே!
2006 ஆம் ஆண்டில், அன்றைய மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா தலைமையிலான இடது சாரிக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது , "நானோ கார்" தொழிற்சாலைக்காக, சிங்கூர் பகுதியில் 1053 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டு, கலவரம் மூண்டது. இதைத் தொடர்ந்து, "நானோ கார்" தொழிற்சாலையை குஜராத் மாநிலத்திற்குக் கொண்டு சென்றுவிட்டார்கள்.
மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் நிலம் கையகப்படுத்தப்பட்டது சம்பந்தமான வழக்கு 10 ஆண்டுகளாக நடந்து, இறுதியில் தற்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. எந்த நோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை; "நானோ கார்" தொழிற்சாலை குஜராத் மாநிலத்திற்குச் சென்றுவிட்டது; விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதில் அரசு நடைமுறைகள் சரியாகக் கடைப்பிடிக்கப்படவில்லை; 30 விழுக்காடு நிலம் அதன் உரிமையாளர்களின் விருப்பம் கேட்கப்படாமல்கை யகப்படுத்தப்பட்டது; போன்ற காரணங்களினால், சிங்கூரில் அரசு கையகப்படுத்திய நிலத்தை விவசாயிகளிடமே திரும்ப ஒப்படைத்துவிடவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் பழுப்பு நிலக்கரி இருப்பது கண்டறியப்பட்டு, அதை ஆதாரமாகக் கொண்டு 2400 மெகா வாட் மின்சாரத்திட்டத்தைச் செயல்படுத்த, பல கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளிடமிருந்து 8300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் கடந்த 20 ஆண்டுகளாக எவ்விதப் பணியும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் தான் , இங்கே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை, விவசாயிகளிடமே திரும்ப ஒப்படைத்திட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.மேற்கு வங்கம் - சிங்கூர் நிலப்பிரச்சினையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணியில், இந்தக் கோரிக்கையின் அடிப்படை நியாயத்தை ஆய்ந்து பார்த்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அதிமுக அரசு முன் வரவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.