அண்ணா நினைவுநாள் ஊர்வலத்தில் 2வது ஆண்டாக பங்கேற்காத கருணாநிதி... ஸ்டாலின் நேரில் சந்திப்பு!
பேரறிஞர் அண்ணா நினைவுநாள் ஊர்வலத்தில் இரண்டாவது ஆண்டாக திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக பங்கேற்கவில்லை.
Recommended Video
சென்னை: பேரறிஞர் அண்ணா நினைவு நாள் ஊர்வலத்தில் இரண்டாவது ஆண்டாக திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக பங்கேற்கவில்லை. இதனால் திமுக ஊர்வலத்தில் பங்கேற்க செல்லும் முன்னர் செயல்தலைவர் ஸ்டாலின் கருணாநிதியை சந்தித்தார்.
பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் திமுக சார்பில் சேப்பாக்கத்தில் இருந்து அண்ணா நினைவிடம் வரை ஊர்வலமாக செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதே போன்று இன்று 49வது நினைவு நாளை முன்னிட்டு திமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பொருளாளர் க.அன்பழகன் உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்றனர். முன்னதாக திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் அவரை கோபாலபுரம் இல்லத்தில் ஸ்டாலின் சந்தித்தார்.
அவரிடம் முரசொலி செய்தித்தாளில் அண்ணா நினைவு தினத்தை ஒட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தியை ஸ்டாலின் காண்பித்தார். உடல்நலக்குறைவு காரணமாக இரண்டாவது ஆண்டாக திமுக தலைவர் கருணாநிதி அமைதி ஊர்வலத்தில் பங்கேற்கவில்லை. கடந்த ஆண்டே கருணாநிதி அமைதி ஊர்வலத்தில் பங்கேற்காததை முன்னிட்டு ஸ்டாலின் முகநூலில் ஓய்வறியா தலைவர் கருணாநிதி ஓய்வில் இருக்கும் சூழலில், அவரது வழிகாட்டுதல்படி அமைதிப் பேரணி நடைபெற்றதாக கூறி இருந்தார்.