கடவுளும் கருணாநிதியும்... நாத்திகரைப் பின்தொடரும் கடவுள்!
கடவுள் மறுப்பாளரான கருணாநிதியின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள்.
Recommended Video
சென்னை: கடவுள் மறுப்பாளரான கருணாநிதியின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள், நாத்திகரை கடவுளே பின் தொடருகிறாரோ என்ற வியப்பைத் தான் ஏற்படுத்துகிறது.
கடவுளை தினமும் தொழுது, தவமாய் தவம் இருந்தால் கூட சிலருக்கு வரங்கள் கிடைப்பதில்லை. ஆனால், ஆன்மீகத்தை நம்பாமல் விலகிச் செல்லும் கடவுள் மறுப்பாளர்களின் வாழ்க்கையில் பல ஆச்சர்யமான அதிசயங்கள் நடப்பதை நாம் கேள்விப் பட்டிருப்போம். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் திமுக தலைவர் கருணாநிதி.
இதோ அவர் வாழ்வில் நடந்த சில வியப்பை ஏற்படுத்தும் சம்பவங்கள்..
ஏகாதேசி அன்று மரணம் கிடைத்தால் மோட்சம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதற்காக பலரும் இறைவனிடம் வரம் கேட்டுக் காத்திருக்கின்றனர். ஆனால், ஆத்திகர்கள் பலருக்கு கிடைக்காத இந்த வரம், நாத்திகரான கருணாநிதிக்கு கிடைத்துள்ளது. ஆம், அவர் உயிர் பிரிந்த தினமான நேற்று ஏகாதசி. துவாதசி தினமான இன்று அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. இதனால் மறுமை கிடையாது.சொர்க்கம்தான் என்கிறார்கள் ஆன்மீகவாதிகள்.இப்படிப்பட்ட மகா புண்ணிய மரணம் அன்றாடம் கடவுளை வழிபடும் ஆஸ்திகர்களுக்கே கிடைத்ததில்லை' என்பதே அவர்களது கருத்து.
இதேபோல், கடந்த 2007ம் ஆண்டு சென்னை கோபாலபுரம் வீட்டிற்கே நேரடியாகச் சென்று, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியை நேரில் சந்தித்தார் சாய்பாபா. வழக்கமாக சாய் பாபாவைத்தான்அனைவரும் சென்று சந்திப்பார்கள். மைக்கேல் ஜாக்சன் உட்பட பலருக்கு எவ்வளவோ போராடியும் அந்த வாய்ப்பு வாழ்நாளில் கிட்டவில்லை. ஆனால், சாய்பாபாவே நேரில் சென்று கருணாநிதியை சந்தித்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி சாய் பாபா கருணாநிதி வீட்டுக்குள்அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் வீட்டுக்குள் இருந்த லிப்ட் மூலம் முதல்தளத்திற்கு சாய் பாபா சென்றார். அங்கு அவரை முதல்வர் கருணாநிதி வரவேற்றார். அவருடன் மனைவி தயாளு அம்மாள், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்,கருணாநிதியின் சகோதரி ஆகியோர் சாய்பாபாவை வரவேற்றனர்.
பின்னர் கருணாநிதியுடன் சுமார் முக்கால் மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார் சாய்பாபா. அவரிடம் தான் எழுதிய குறளோவியம், தாய் காவியம் ஆகியவற்றின்ஆங்கிலப் பதிப்புகளை கருணாநிதி வழங்கினார்.
முதல்வரின் மனைவி தயாளு அம்மாள் சாய்பாபாவின் காலில் விழுந்து வணங்கி ஆசிபெற்றார். அதன் பின்னர் சாய்பாபா விடைபெற்றுச் சென்றார். அவரை வீட்டின் வாசல்வரை வந்து கருணநிதி வழியனுப்பி வைத்தார்.
சாய் பாபா சென்ற பின்னர் அவருடன் என்ன பேசினீர்கள் என்று செய்தியாளர்கள் கருணாநிதியிடம்கேட்டபோது, "தமிழ் பேசினேன். அவர் நன்றாகவே தமிழ் பேசுகிறார். நான் ஆன்மீகம் பேசவில்லை, அவரும்அரசியல் பேசவில்லை" என தனக்கே உரிய விதத்தில் வார்த்தை வித்தகர் கருணாநிதி பதிலளித்தார்.