நலமுடன் நல்ல நேரத்தில் வீடு திரும்பினார் கருணாநிதி- தொண்டர்கள் உற்சாகம்
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி பூரண குணமடைந்து வீடு திரும்பினார். கோபாலபுரம் வீட்டு வாசலில் காத்திருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை : திமுக தலைவர் கருணாநிதி கடந்த 15ஆம் தேதி இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல், நுரையீரல் நோய் தொற்று காரணமாக அங்கு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ட்ரக்கியோஸ்டமி சிகிக்சை அளிக்கப்பட்டது.
கருணாநிதியை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் நேரிலும், தொலைபேசியிலும் விசாரித்தனர்.
தொடர் சிகிச்சை
காவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. அதில், அவரது உடல்நலம் தேறி வந்தது. தற்போது அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது .
டிவி பார்த்த கருணாநிதி
இரு தினங்களுக்கு முன்பு கருணாநிதி தொலைக்காட்சியை பார்ப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் காவிரி மருத்துவமனை வெளியிட்டிருந்தது.
அதன் பின்னர் ஓரிரு நாளில் கலைஞர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
நல்ல நாட்கள்
புதன்கிழமை அஷ்டமி, நேற்று நவமி என்பதால் ஓய்வு எடுத்த அவர், இன்று 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மருத்துவமனைக்கு அவரது மகன்கள் அழகிரி, ஸ்டாலின், மு.க. தமிழரசு, மகள்கள் கனிமொழி, செல்வி ஆகியோரும் வந்துள்ளனர். முக்கிய நிர்வாகிகளும் மருத்துவமனைக்கு வந்தனர்.
வெள்ளிக்கிழமை வீடு திரும்பல்
நல்ல நேரம் பார்த்து கருணாநிதி 4.45 மணியளவில் மருத்துவமனையில் இருந்து கிளம்பினார். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் நல்லநேரம் மாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணிவரை என்பதால் அதற்கு முன்பாக மருத்துவ சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
தொண்டர்கள் உற்சாகம்
கருணாநிதியைக் காண காவேரி மருத்துவமனை வாசலிலும், கோபாலபுரம் இல்ல வாசலிலும் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அவரைப் பார்த்து உற்சாக முழக்கமிட்டனர்.
கருணாநிதி வீட்டில் ஓய்வெடுத்தாலும், அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை தொடரும் என்று காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.