முடிச்சூரில் கருணாநிதி.. வெள்ளம் பாதித்த மக்களைச் சந்தித்தார்.. நிவாரணப் பொருட்களை வழங்கினார்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி இன்று தாம்பரம் அருகே உள்ள முடிச்சூருக்குச் சென்று அங்கு வெள்ளம் பாதித்த பகுதிகளைச் சேர்ந்த மக்களைச் சந்தித்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
திமுக தலைவர் கருணாநிதி தனது வயதையும், உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் வெள்ளம் பாதித்த மக்களைச் சந்தித்து வருகிறாரஹ்.
சென்னை சிந்தாதிரிபேட்டை நெடுஞ்செழியன் நகருக்கு நேற்று சென்ற கருணாநிதி அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு நிவாரண உதவிகளையும் அவர் வழங்கினார்.
இதனையடுத்து சைதாப்பேட்டைக்கு சென்ற அவர் அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழைமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதனை தொடர்ந்து கோட்டூர்புரத்திற்கு கருணாநிதி சென்றார்.
பலத்த மழையால் அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கும், வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அவர் ஆறுதல் கூறினார். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் திமுகவினரும் பொதுமக்களும் வழங்கிய நிவாரண பொருட்களை வெள்ளம் பாதித்த மக்களுக்கு கருணாநிதி வழங்கினார்.
இன்று அவர் முடிச்சூருக்குச் சென்றார். அங்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களிடையே பேசிய கருணாநிதி ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.
கருணாநிதியுடன் அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முன்னதாக திமுக தலைவர் கருணாநிதி வழங்கிய உதவிப் பொருட்கள் அடங்கிய பைகளில் அவரது படமும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் படமும் இடம் பெற்றிருந்தது. இதை பலர் விமர்சித்து சமூக வலைதளங்களில் எழுத ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் இன்று வழங்கப்பட்ட உதவிப் பொருட்கள் அனைத்தும் பெரிய பெரிய அட்டை டப்பாக்களில் வைத்துத் தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.