வருங்காலத் தலைமுறையினரை சிறந்தவர்களாக உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள்: கருணாநிதி வாழ்த்து
சென்னை: ஆசிரியர் சமுதாயத்திற்கு எந்த நாளிலும் அரணாக விளங்கிடும் தி.மு.க.வின் சார்பில் தமிழக ஆசிரியர் அனைவருக்கும் எனது 'ஆசிரியர் தின' நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், .ஆசிரியர்களை ஏணிப்படிகள் என்பார்கள். ஆசிரியர்கள் ஏணிப்படிகள் மட்டுமல்லர்; அவர்கள் கோபுர கலசங்களாகவும் உயர்ந்திட முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தியவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். அவர் ஆசிரியப் பணிபுரிந்து, அறிவாற்றலால் உயர்ந்து, தம் சான்றாண்மைக் குணங்களால் சிறந்து, குடியரசுத் தலைவராக விளங்கிப் புகழ் படைத்தவர். அவர் பிறந்த நாள் செப்டம்பர் 5ஆம் நாள், "ஆசிரியர் தினம்" என ஆண்டுதோறும் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது.
இந்நன்னாளில் வருங்காலத் தலைமுறை மக்களை அறிவிலும், ஆற்றலிலும், செயல்பாட்டுத் திறனிலும், சீரிய பண்பாட்டு உணர்விலும் சிறந்தவர்களாக உருவாக்கிடும் திருப்பணியில் வாழ்நாள் முழுதும் தொண்டு களாற்றிடும் பெருமைக்குரிய ஆசிரியப் பெருமக்களுக்கு விருது வழங்கிப் பெருமைப்படுத்தப்படுகிறது.
ஆசிரியர் சமுதாயம் மகிழும் வகையில், "நல்லா சிரியர் விருது" என வழங்கப்பட்ட அந்த விருதின் பெயரை, 1997இல், "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது" எனப் பெயர் மாற்றம் செய்து வழங்கிட வகை செய்தது தி.மு.க. அரசு. அத்துடன், ஆசிரியப் பெருமக்களின் நல்வாழ்வு கருதி உயர்கல்விக்கு ஊக்க ஊதியம்; ஈட்டிய விடுப்பு நாட்களைச் சரண் செய்திடும் ஆசிரியர்களுக்கு அந்நாட்களுக்கான ஊதியம்; 10 ஆண்டுகள் பணி முடித்தால் தேர்வு நிலை ஊதியம்; 20 ஆண்டுகள் பணி முடித்தால் சிறப்பு நிலை ஊதியம்; தமிழாசிரியர்களிடையே இருநிலை நீக்கம்;
தமிழாசிரியர்களின் 'புலவர்' பட்டயம் 'பி.லிட்' பட்டமாக மாற்றம்; தமிழாசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு; ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியங்கள்; அகவிலைப் படிகள்; தனியார் பள்ளி ஆசிரியர்களுக்குப் பணிப் பாதுகாப்பு; நகராட்சி, மாநகராட்சிப் பள்ளிகளின் ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களாக்கியது; பதிவு மூப்பு அடிப்படையிலேயே பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்தது; தொகுப்பூதிய ஆசிரியர் நியமன முறையை அடியோடு ரத்து செய்தது என எண்ணற்ற சலுகைகளை ஆசிரியர்களுக்கு வழங்கியது தி.மு.க. அரசு.
இவைமட்டுமல்லாமல், 19 ஆண்டுகால தி.மு.க. ஆட்சிக் காலங்களில் நான்கு முறை ஊதியக் குழுக்களை அமைத்து; ஆசிரியர் சமுதாயமும், அரசு ஊழியர்களும் உயர்ந்த ஊதியங்களைப் பெற்று மகிழ்ந்திடவும் ஆசிரியர் அரசு ஊழியர் குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திடவும் வழி வகை செய்ததும் தி.மு.க. அரசே என்பதனை இந்நாளில் நினைவுபடுத்திட விரும்புகிறேன்.
ஓர் ஆசிரியருக்கு வேலை கொடுத்தால் அவர் குடும்பம் உயரும்; அவரைச் சுற்றியுள்ள உறவினர்கள் மகிழ்வர்; அவர்கள் குடும்பத்தில் வறுமை விரட்டப்படும்; சமுதாயம் முன்னேற்றம் காணும் என்ற அடிப்படையில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்கும் காலங்களில் எல்லாம் அதிக அளவில் ஆசிரியர் நியமனங்களைச் செய்துள்ளது.
ஆசிரியர் சமுதாயத்திற்கு எந்த நாளிலும் அரணாக விளங்கிடும் தி.மு.க.வின் சார்பில் தமிழக ஆசிரியர் அனைவருக்கும் எனது 'ஆசிரியர் தின' நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.