கருணாநிதி கட்டி எழுப்பிய அறிவு திருக்கோவில்.. கோபாலபுரம் இல்லம்!
கோபாலபுரம் இல்லத்தை அஞ்சுகம் அறக்கட்டளைக்கு கருணாநிதி எழுதி வைத்தார்.
சென்னை: கோபாலபுரம் இல்லம்... வெறும் செங்கல்லாலும் சிமெண்ட்டாலும் எழுப்பப்பட்ட கட்டிடம் அல்ல..
எண்ணற்ற ஆட்கள் மட்டும் வாழந்து மறைந்துவிட்டு செல்லும் வீடும் அல்ல அது.. அந்த இல்லம் கருணாநிதி என்ற மாபெரும் ஆளுமையின் கீழ் பின்னப்பட்ட உயர்ந்த எழில் கோட்டை... கணக்கிலடங்கா விழாக்களையும், இழப்புகளையும், கோலாகலங்களையும், பெருமை தரும் சம்பவங்களையும் தற்போது வரை அளித்து வரும் ஒரு வரலாற்று சான்றின் பிறப்பிடம் அது.
1955-ம் ஆண்டு, தான் அரசியலுக்கு வந்து தமிழகம் முழுவதும் காடு, மேடுகளில் ஓடி, நடையாய் நடந்து கட்சியை வளர்த்தபோது, தனக்காக கோபாலபுரத்தில் ஒரு வீட்டை வாங்கினார் கருணாநிதி. பிறகு 1968-ம் ஆண்டு அந்த வீட்டை தன் மகன்களான அழகிரி, ஸ்டாலின், தமிழரசு ஆகியோரின் பெயர்களில் பதிவும் செய்து தந்தார். வாழும்போதே வானளாவிய வள்ளலாக திகழ்ந்த கருணாநிதி, இதனை தானமாக அளிக்க முடிவெடுத்தார். ஆம். 2010-ம் ஆண்டு தன் பிறந்த நாள் அன்று அதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
பகிரங்க அறிவிப்பு
தன் மனைவியின் வாழ்நாளுக்கு பிறகு, அஞ்சுகம் அறக்கட்டளைக்கு தானமாக வழங்க போவாக அறிவித்தார். கூடவே இன்னொன்றையும் சொன்னார், "கலைஞர் கருணாநிதி மருத்துவமனை என்று அழைக்கப்படும்" என்றார். இதன் அறங்காவலர்கள் யார் தெரியுமா? ஆ.ராசா மற்றும் கவிஞர் வைரமுத்துதான். பொதுவாக, மரணம் என்பது இயற்கை நிகழ்வுதான், அதை துணிவுடன் எதிர்கொள்பவனே சிறந்த மனிதன். தன் மரணம் குறித்து 8 ஆண்டுகளுக்கு முன்பே கருணாநிதி சிந்தித்திருந்தாலும், தான் வாழும் வீடு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அதனை பகிரங்கமாக அனைவர் முன்பும் அறிவித்தார்.
ஏனோ தெரியவில்லை
ஆனால் இந்த விஷயத்தில் மறைந்த ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டினை ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது. தன் மகள் அம்முவிற்காக, பார்த்து பார்த்து ஒவ்வொரு அறையும் தாய் சந்தியா கட்டிய வீடுதான் வேதா இல்லம். தாயின் மரணத்திற்கு பின்னர் தனித்திருந்த கோரமான நாட்களிலும் சரி, வேதனை, இக்கட்டுகளில் உழன்று தவித்த பொழுதுகளும் சரி... தன் வாழ்நாளுக்கு பின்னர் இந்த போயஸ் இல்லத்தை பற்றி ஜெயலலிதா சிந்திக்க மறந்தது ஏனோ தெரியவில்லை.
ஜெயலலிதா யோசித்திருக்கலாம்
வேதா இல்லத்தின் கிரகப்பிரவேசத்தின்போது வந்திருந்த ஒவ்வொருவரையும் அழைத்து சென்று, "இதுதான் என் டிரஸ்ஸிங் ரூம், இதுதான் டிராயிங் ரூம்.." என்று குழந்தைபோல் சொல்லி மகிழ்ந்த ஜெயலலிதா, இந்த வீட்டினை பற்றி கடைசி காலகட்டத்தில் யோசிக்க மறந்தது விந்தையாகவே உள்ளது. ஒருவேளை ஜெயலலிதாவும் கருணாநிதியைபோல் பயனுள்ள வகையில் யோசித்திருந்தால் அது பல லட்சம் மக்களுக்கு பயனுள்ள ஒரு இல்லமாகவே நிச்சயம் இருந்திருக்கும்.
காலத்துக்கும் சொல்லும்
குடும்பம், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கொள்ளுபேரப்பிள்ளைகள் என இவ்வளவு உறவும் கொண்ட கருணாநிதி தன் வாழ்ந்த வீட்டை மருத்துவமனையாக உயிருள்ள காலத்திலேயே அறிவித்திருக்கிறார். கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் இனிவரும் காலங்களிலும் கலைஞரின் பெயர் சொல்லியே காலத்துக்கும் கோபாலபுரம் இல்லம் தாங்கி நிற்க போவது உறுதி.