கருணாநிதியிடமிருந்து யாரும் நினைத்து பார்க்க முடியாத பரிசை பெற்ற வைரமுத்து!
Recommended Video
சென்னை: கவிஞர் வைரமுத்துவிற்கு, திமுக தலைவர் கருணாநிதி, முக்கியமான ஒரு பரிசை பிறந்தநாளையொட்டி வழங்கி அசத்தியுள்ளார்.
கவிஞர் வைரமுத்து தன்னுடைய பிறந்தநாளையொட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதியை சில நாட்களுக்கு முன்பு சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது , தனக்கு ஒரு பிறந்தநாள் பரிசு வேண்டும் என்று கருணாநிதியிடம், வைரமுத்து கேட்டுள்ளார்.
முகம் தூக்கி என்ன வேண்டும் என்பதை போல பார்த்தாராம் கருணாநிதி. 'நீங்கள் தமிழ் எழுதிய உங்கள் பேனா வேண்டும்' என்று கேட்டாராம் வைரமுத்து. கருணாநிதி அருகிலிருந்த மகள் கனிமொழியிடம், கண்காட்ட, வீட்டுக்குள் இருந்து கருணாநிதி எழுதி வந்த பேனாவை கொண்டுவந்து, கொடுத்துள்ளார். இதை கருணாநிதி வைரமுத்துவிற்கு பிறந்த நாள் பரிசாக அளித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் வைரமுத்து எழுதியுள்ளதாவது:
என் பிறந்தநாளை ஒட்டிக் கலைஞரிடம் அவர் எழுதிய பேனாவைப் பரிசாகப் பெற்றேன். என் வாழ்நாளின் பெரும்பரிசு என்று பெருமையுற்றேன்.
அதே பேனாவில் எழுதிய கவிதை இது :
கண்ணிலே குடியிருக்கும்
கலைஞரே! கொஞ்ச நாளாய்ச்
சின்னதாய் எனக்கோர் ஆசை
செவிசாய்த்தே அருள வேண்டும்
பொன்பொருள் வேண்டாம்; செல்வ
பூமியும் வேண்டாம்; வேறே
என்னதான் வேண்டும்; உங்கள்
எழுதுகோல் ஒன்று வேண்டும்
*
எழுதுகோல் அன்று; நாட்டின்
எழுகோடித் தமிழர் நெஞ்சை
உழுதகோல்; உரிமைச் செங்கோல்!
உழைக்கின்ற ஏழை யர்க்காய்
அழுதகோல்; இலக்கி யத்தின்
அதிசய மந்தி ரக்கோல்
தொழுதுகோல் கொண்டேன்; நீங்கள்
தொட்டகோல் துலங்கச் செய்வேன்