வைகோ துரோகி... கூச்சலிட்டு செருப்பை காட்டி அநாகரிகமாக நடந்து கொண்ட திமுக தொண்டர்கள்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கச் சென்ற வைகோவிற்கு திமுக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு செருப்பை காட்டி அநாகரீகமாக நடந்து கொண்டனர்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி கடந்த 1ஆம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். 7 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் கோபாலபுரம் இல்லத்துக்கு திரும்பிய கருணாநிதி கட்சிப் பணிகளை கவனிக்கத் தொடங்கினார். 20ம்தேதி நடைபெறும் திமுக பொதுக் குழு கூட்டத்தில் அவர் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கருணாநிதிக்கு வியாழக்கிழமையன்று இரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தொண்டை மற்றும் நுரையீரலில் நோய் தொற்று ஏற்பட்டதால் அவர் சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டார். உடனடியாக கருணாநிதியை காவேரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு 4வது மாடியில் உள்ள சிறப்புப் பிரிவில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
கருணாநிதி 93 வயது முதுமை காரணமாக இயல்பாக சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டதால் அவருக்கு ட்ரக்யாஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சைக்குப் பிறகு கருணாநிதியின் சுவாசம் சீரானது. மருத்துவர்களின் சிகிச்சைக்கு கருணாநிதி உடல் நிலை முழு ஒத்துழைப்பு கொடுத்தது.
கருணாநிதியை மனைவி ராஜாத்தி அம்மாள், மகள்கள் செல்வி, கனிமொழி அருகில் இருந்து கவனித்து வருகிறார்கள். கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு நேற்றிரவு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பாமகவின் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் வந்து நலம் விசாரித்தனர்.
இன்று காலை 11 30 மணிக்கு ராகுல் காந்தி கருணாநிதியை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அவரைத் தொடர்ந்து மூத்த கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் நல்லக்கண்ணுவும் நலம் விசாரித்து சென்றார். அதிமுக எம்.பி. தம்பித்துரை, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் நேரில் வந்து ஸ்டாலினிடம் நலம் விசாரித்து உடல் நலம் பெற்று வீடு திரும்ப வாழ்த்து கூறினர்.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வைகோ 7 மணிக்கு சென்றார். அப்போது அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வைகோ, மருத்துவமனைக்குள் கால் வைக்கக் கூடாது என்று கத்தி கூச்சலிட்டனர்.
வைகோ வாகனம் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். பல தொண்டர்கள் செருப்பை எடுத்து கையில் வைத்துக்கொண்டு வைகோவைப் பார்த்து காட்டினர். அங்கு வந்த போலீசார் வைகோவை பாதுகாப்பாக சூழ்ந்து கொண்டனர். வைகோவை துரோகி என்றும் கூச்சலிட்டனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வைகோ, உடனடியாக காரில் ஏறி திரும்பி சென்றார். திமுகவினர் அநாகரீகமாக நடந்து கொண்டு அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை சந்திக்க பல கட்சி தலைவர்களும் வந்தனர். அப்போது மருத்துவமனை வாசலில் இருந்த அதிமுக தொண்டர்கள் அமைதி காத்தனர். மிகவும் தன்மையுடன் நடந்து கொண்டனர். இந்த நிலையில் திமுகவினர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது காட்டிய எதிர்ப்பு அநாகரீகத்தின் உச்சம் என்று அரசியல் ஆர்வலர்கள் கருத்து கூறியுள்ளனர்.