பெண்ணியம் போற்றிய கலைஞர் கருணாநிதி!
-ராஜாளி
திராவிட இயக்கம் முன்னெடுத்த பல்வேறு போராட்டங்களில் பெண்ணுரிமைக்கான போராட்டங்கள் மிக முக்கியமானவை. பல்வேறு கால கட்டங்களில் திராவிட இயக்க தலைவர்கள் பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்திருந்தாலும் அவர்களுக்கான உரிமைகளை நிலை நாட்டுவதிலும் பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் கருணாநிதியின் பங்கு அளப்பரியது.
ஆட்சிக்கட்டிலில் கருணாநிதி அமருவதற்கு முன்பாகவே அவரது கதைகளும், கட்டுரைகளும், கவிதைகளும் மேடை முழக்கங்களும் பெண்ணுரிமையை பெரிதும் பேசியது. பெண்களின் உரிமையை யாரோ ஒருவர் வாங்கி கொடுத்து விடமுடியாது என்பதுவும் அது அவர்களே அடைய வழி செய்தல் வேண்டும் என்பதிலும் திண்ணமாக இருந்தவர் அவர். கணவனை இழந்த பெண்களின் வலியறிந்த அவர்
கண்ணுக்குள் பாவைபோல்
உருண்டிருக்கும் உள்ளம் - கைம்
பெண்ணுக்கு இருப்பதையும்
உணர்ந்திடுவாய்" என்று
அவர்களின் வலியை உணர்த்தினார். அதோடு வாழ்வின் விளிம்பு நிலையில் இருக்கும் அவர்களை விதவை என்ற சொல்லால் அழைக்கும்போது அந்த சொல்லில் கூட பொட்டு இல்லை என கருதி அந்த சொல்லுக்கு மாற்றாக இரு திலகங்கள் வரும் வகையில் கைம்பெண் என்று அழைக்கத் தொடங்கினார். ஆணைப் போலவே பெண்ணுக்கும் அனைத்திலும் சம உரிமை உண்டு என்பதை உணர்த்திய அவர் பெண்களின் மறுமணத்திற்கு பெரிதும் ஆதரவளித்தார் இதற்காக அவர் ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன.
வரதட்சணை நோய்க்கு மருந்திடும் வகையிலும் அதே வேளையில் பெண்கள் குறைந்த பட்ச கல்வியாவது கற்க வேண்டும் என்ற நோக்கிலும் 8 -ம் வகுப்பு படித்த பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டமொன்றை ஏற்படுத்தினார். இதன் மூலம் முதிர்கன்னிகள் என்ற நிலை படிப்படியாக குறைந்தது பொருளாதார சுதந்திரம் பெண் விடுதலையில் முக்கியப் பங்கு என்பதற்காக இவரது ஆட்சிக் காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டன.
சொத்துரிமையில் ஆணுக்கு நிகரான சம பங்குரிமை பெண்களுக்கு உண்டு என்பதை சொத்துரிமைச் சட்டம் மூலம் நிலை நாட்டிய கருணாநிதி உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகித ஒதுக்கீடு பெண்களுக்கு என்பதை உறுதி செய்தார்.
பெண்ணுக்கான அடையாளமான தாய்மை அடைவதிலும் மகப்பேறு தொடர்பான விசயங்களும் பெண்ணால்தான் முடிவெடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அவர் தாய்மை அடைந்த பெண்களுக்கு உதவிட நிதி உதவியும் வழங்கினார். பெண் குழந்தை பிறப்பு முதல் இறுதிக்காலம் வரை சமூகப் பாதுகாப்புடன் வாழ வழிவகை செய்தவர் கலைஞர். மகளிருக்கான இலவச பட்டப்படிப்பு திட்டம் மூலம் பெண் கல்வியை மேம்படுத்தினார். கல்வியை மேம்படச் செய்ததோடு மட்டுமல்லாது அரசுப் பணியில் அவர்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடும் அளித்தார்.
பெண்கள் முன்னேற்றத்தில் கருணாநிதியின் பங்களிப்பு குறித்து முன்னாள் சட்டபேரவை உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியை சேர்ந்தவருமான பாலபாரதி அவர்களிடம் கேட்டபோது, ''பெண்கள் ஆணையதிற்கு சட்ட அந்தஸ்து வழங்கப்பட்டு அது செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது, பெண்கள் மீதான வன்முறைகளை களைவதற்கும் குறைப்பதற்குமான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு தனிப் பள்ளிகளும் விடுதிகளும் அரசால் நடத்தப்படுவது போல இஸ்லாமிய பெண் குழந்தைகளுக்கு விடுதி வசதி செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை கருணாநிதியால் நிறைவேற்றப்பட்ட்டு அந்த மாணவிகளுக்காக 5 விடுதிகள் கட்டப்பட்டது இது இஸ்லாமிய மாணவிகள் கல்வி கற்கும் சூழல் எளிதாகியது. அவரது ஆட்சியில்தான் சட்டப்பேரவையில் பெண் உறுப்பினர்கள் பேசுவதற்காக கை தூக்கினாலும் சபாநாயகர் கண்டுகொள்வதில்லை என்ற குற்றசாட்டை கூற முடிந்ததுடன் அதற்கான தீர்வையும் பெற முடிந்தது.
கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் பெண்களுக்கான சொத்துரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் ஆண்களுக்கு இணையான உரிமையை குடும்பத்திலும் பெண்களால் பெற முடிந்தது. அதோடு திருமண நிதி உதவி திட்டத்தில் நிதியை உயர்த்தி வழங்கியது 3ம் பாலினத்தவருக்கு நல வாரியம் அமைக்கப்பட்டது. அவர்களுக்கான அங்கீகாரத்தை உறுதி செய்தது'' என்றார்.
மேலும் பேரவையில் ஆண்களின் படங்கள் மட்டுமே இருந்த நிலையில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்களின் படத்தை புதிய சட்டப் பேரவையில் திறக்கப்பட்டதையும் அதனால் தங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியையும் அதே வேளையில் ஜெயலலிதாவால் மீண்டும் சட்டப் பேரவை புனித ஜார்ஜ் கோட்டைக்கு கொண்டு வரப்பட்டபோது அந்த படம் இல்லாமல் போனதையும் நினைவு கூர்ந்தார் பாலபாரதி.
சட்டப் பாதுகாப்பில் கருணாநிதியின் பங்கு குறித்து ஒன் இந்தியா தமிழிடம் பேசிய வழக்கறிஞர் அருள்மொழி ''பெண்கள் விசயத்தில் வன்முறைக்கு எதிரான பாதுகாப்பு என்பதை விட வாழ்க்கைக்கான பாதுகாப்பு என்பதை கொடுத்ததே கருணாநிதிதான். கல்விக்கான உதவி கிராமப்புற மாணவர்கள், பெண்கள் என்று ஒவ்வொரு படிமமாக அவரது ஆட்சி காலத்தில் விரிவு படுத்தப்பட்டது.
பெண்கள் மட்டுமே கல்வி பயிலும் அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களாகவும் பெண்களே இருக்கவேண்டும் என்பதை உறுதிப் படுத்திய அவர் அரசுப் பணியில் 33 % பெண்களுக்கான இட ஒதுக்கீடாக கொண்டுவந்தார். இதன் மூலம் அரசுப் பணியாளர்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்தது. இதன் விளைவாக சட்டத்துறையிலும் பெண்களின் பங்கு அதிகரித்தது. இந்தியாவிலேயே சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும்தான் 12 பெண் நீதிபதிகள் உள்ளனர். இது நம்மை விட கற்றவர்கள் அதிகம் உள்ள கேரளாவிலோ அல்லது பாஜக ஆளும் மாநிலங்களிலோ காண முடியாத ஒன்று.
இன்று பெண்கள் குடும்பத்தில் தங்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்று உரிமையோடு கேட்பதற்கு காரணமே கருணாநிதிதான். சொத்து குறித்து பேசும் பெண்கள் இன்று சொத்துரிமை சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டை குறிப்பிட்டே தங்களது வாதங்களையும் முன் வைக்கின்றனர். இப்படியெல்லாம் இருந்தாலும் பெண்கள் அமைப்புகள் கருணாநிதியின் செயல்பாடுகளை பாராட்டுவதில்லை மாறாக அவர் செய்யாமல் விட்ட அல்லது சிறு சிறு குறைகளை பெரிதுபடுத்துகின்றனர் என்றார் அருள்மொழி.
கலப்பு திருமணம் செய்யும் தம்பதியரில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரின் பிரிவுக்கான முன்னுரிமை வழங்கப்படுவதை குறிப்பிட்ட அருள்மொழி இவை அனைத்தும்தான் பெண்கள் சமூக மேம்பாட்டுக்கான திட்டங்கள் என்று கூறினார். இந்த அடிப்படை திட்டங்களை கருணாநிதி செய்ததன் விளைவாகவே அடுத்து வந்த ஜெயலலிதாவும் பெண்களுக்கான சில திட்டங்களை செயல்படுத்தினார் என்றார்.
எதார்த்தத்தில் கருணாநிதியின் பங்கு பெண்கள் முன்னேற்றத்தில் அளப்பிர்கரியது என்பதில் எந்த ஐயமும் இல்லை