திமுக கூட்டணிக்கு இடதுசாரி கட்சிகள் வந்தால் ஏற்றுக் கொள்வோம்: கருணாநிதி
சென்னை: நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்ததைத் தொடர்ந்து, ‘ஜனநாயக முற்போக்கு'' கூட்டணிக்கு இடதுசாரி கட்சிகள் வந்தால் ஏற்றுக்கொள்வோம் என திமுக தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னர், வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க கூட் டணியில் இணைந்து போட்டியிட மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் முடிவு செய்து இருந்தன.
ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப் படுவதற்கு முன்னதாகவே தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கான தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா.
அப்போது அவர் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடுக்குப் பிறகு வேட்பாளர்கள் மாற்றம் இருக்கலாம் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் தலா 4 லோக்சபா தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்தன.
அ.தி.மு.க. சார்பில் அவர்களுக்கு தலா ஒரு தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக இருகட்சியினரும் கூட்டாக அறிவித்தனர்.
இந்நிலையில், தி.மு.க. தலைமையிலான ‘‘ஜனநாயக முற்போக்கு'' கூட்டணிக்கு இடதுசாரி கட்சிகள் வந்தால் ஏற்றுக்கொள்வோம் என தி.மு.க. தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று இரவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
இடதுசாரிகள்...
கேள்வி:- இடதுசாரி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுமா?
பதில்:- அழைப்பு விடுக்க கூடாது என்று ஒன்றுமில்லை.
கூட்டணி...
கேள்வி:- வந்தால் கூட்டணியில் ஏற்றுக்கொள்வீர்களா?
பதில்:- அழைப்பு விடுக்கப்பட்டு வந்தால் ஏற்றுக்கொள்வோம்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.