வள்ளுவருக்கு கோட்டம்.. குமரி கடலில் பிரமாண்ட கற்சிலை.. "நவயுக கரிகாலன்" கருணாநிதி!
ஏராளமான சிலைகள், கட்டிடங்களை கலைஞர் தமிழகத்திற்கு அளித்துள்ளார்.
சென்னை: மண்ணின் மைந்தர்களாக பிறந்து மாமன்னர்களாக வாழ்ந்து, இந்த மண்ணுக்குள்ளேயே கலந்திருக்கும் மாமனிதர்களில் மிக முக்கியமானவர் கலைஞர்.
ராஜராஜசோழன் தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்தான் என்பது வரலாற்று நிகழ்வு. வெறும் கல்லால் வானளாவ கோபுரம் அமைத்து, இன்றளவும் போற்றப்படும் அதிசயத்தை அரங்கேற்றினான் சோழ மன்னன்.
இக்கால சோழ மண்ணின் மைந்தர் கலைஞரோ எண்ணற்ற கட்டட நினைவாலயங்களை எழுப்பி விட்டுச் சென்றுள்ளார். கல்லனையை கட்டினான் கரிகால சோழன் என்று தஞ்சை மண்ணின் மக்கள் இன்றுவரை வாயார புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கருணாநிதியும் நவயுக கரிகாலனாக பல கட்டட நினைவுகளை நம்மிடையை விட்டுச் சென்றுள்ளார்.
பகரும் சரித்திர சின்னங்கள்
சோழர்களுக்கும் முகலாய பேரரசர்களுக்குப் பிறகு கட்டிடக்கலை மீது ஈடில்லா காதல் கொண்ட ஒரே முதலமைச்சர் தமிழகத்தில் கலைஞர் மட்டுமே. கட்டி முடிக்கப்பட்டு இத்தனை ஆண்டுகள் ஆனாலும் நேற்று கட்டின புதுக்கட்டிடம் போலவே கம்பீரம் குறையாமல் உள்ளது வள்ளுவர் கோட்டம். டைடல் பார்க், புதிய சட்டமன்ற கட்டிடம், மக்கள் தலைவர்களுக்கு அமைத்துள்ள நினைவாலயங்கள், பிரமாண்டமான பாலங்கள், விண்ணை தொட்டு நிற்கும் வள்ளுவர் சிலை, கடற்கரையை சாலையை அலங்கரித்த சிவாஜி சிலை உள்பட போன்றவை கலைஞரின் கட்டிடக் கலைக்கு என்றென்றும் சான்று பகரும் சரித்திர சின்னங்களாகும்.
மிளிரும் வள்ளுவர் கோட்டம்
கலைஞர் எழுப்பிய ஒவ்வொரு கட்டிடமும், சிலையும் ஒவ்வொரு வரலாறுகளை தாங்கி இருப்பவை. செங்கற்களாலும் கருங்கற்களாலும் இந்த கட்டிடங்களை இன்னும் பல நூறு வருடங்களுக்கு பேச வைத்தவர் கலைஞர். அதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், வள்ளுவர் கோட்டம். 1976-ம் ஆண்டு தான் முதல்வராக இருந்தபோது, நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டத்திற்கு அடிக்கல் நாட்டி, கட்டிடமும் பிரம்மாண்டமாக வளர்ந்தது. திறப்பு விழாவிற்காக பிப்ரவரி மாதம் 1,2,3 ஆகிய நாட்களும் குறிக்கப்பட்டு, ஏற்பாடுகளும் தீவிரத்தின் உச்சியில் நடைபெற்றன.
மனதில் அரித்த சம்பவம்
ஆனால் அப்போதைய நெருக்கடி நிலையை கருணாநிதி எதிர்த்தற்காக பிரதமர் இந்திரா காந்தி ஜனவரி-30ம் தேதியே திமுக அரசை டிஸ்மிஸ் செய்தார். எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டு விழாவை தள்ளி போடவும் முடியாத நிலை. எனவே வள்ளுவர் கோட்டத்தை ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுதான் திறந்து வைத்தார். அந்தநிகழ்ச்சியில் கலைஞர் கலந்துகொள்ளவில்லை. வள்ளுவர் கோட்டம் சம்பவம் அவருக்கு மனதில் அரித்து கொண்டே இருந்தது.
கல்வெட்டில் பொறித்தார்
அதேபோல திமுக சார்பில் அண்ணாவுக்கு சிலை வைக்க ஆசைப்பட்டார் கலைஞர். அதற்காக வள்ளுவர் கோட்டம் எதிரே அண்ணா சிலை வைக்க அனுமதி தரப்பட்டது. இப்போது கலைஞர் வெகு சாமர்த்தியமாக செயல்பட்டார். வள்ளுவர்கோட்டம் நுழைவாயில் அருகே அண்ணாசிலையை திறந்தார். சிலையின் பீடத்தில், "சிலை திறப்பாளர், வள்ளுவர் கோட்டம் கண்ட கலைஞர் கருணாநிதி" என்று கல்வெட்டில் பொறித்து வைத்தார். மனக்குறை தணிந்தது. அகம் மகிழ்ந்தது.
காலத்துக்கும் தாங்கும்
இன்றுவரை திமுகவினர் அண்ணா பிறந்த நாளன்று வள்ளுவர் கோட்டம் சிலைக்கு வந்துதான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி செல்கின்றனர். இப்படி கிடைத்த சந்தர்ப்பத்தில் கட்டிடம் மற்றும் சிலை இரண்டையும் ஒரே இடத்தில் நிறுவும் நுட்பமான அறிவு கலைஞரை தவிர வேறு யாருக்கு வரும்? இதுபோல இந்த நவகால கரிகாலன் கலைஞர் எழுப்பிய ஒவ்வொரு கட்டிடமும் சிலையும், அவரது முயற்சியையும், நற்பண்பையும் காலத்துக்கும் தாங்கியே நிற்கும்.