தமிழ் சமுதாயத்தின் தனிப்பெரும் தலைவர் கருணாநிதி.. காவேரி மருத்துவமனையில் மதுரை ஆதினம் புகழாரம்!
தமிழ் சமுதாயத்தின் தனிப்பெரும் தலைவர் கருணாநிதி என மதுரை ஆதினம் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை: தமிழ்ச் சமுதாயத்தின் தனிப்பெரும் தலைவர் கருணாநிதி என மதுரை ஆதினம் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இரண்டாவது நாளாக இன்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை அறிக்கை வெளியிட்ட போதும் அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க அரசியல் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் மருத்துவமனைக்கு குவிந்து வருகின்றனர்.
காவேரியில் மதுரை ஆதினம்
இந்நிலையில் மதுரை ஆதினம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அங்கு ஸ்டாலின், கனிமொழியை சந்தித்த அவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
உடல்நிலை தேறிவருகிறது
இதைத்தொடர்ந்து மதுரை ஆதினம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கருணாநிதியின் உடல்நிலை தேறி வருவதாக அவர் தெரிவித்தார்.
எப்போதும் போற்றும்
மதுரை ஆதினம் மேலும் பேசியதாவது, தமிழ் மக்களின் மனம் கருணாநிதியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கருணாநிதியின் தியாகத்தை தமிழ் சமுதாயம் எப்போதும் போற்றும்.
தனிப்பெரும் தலைவர்
எத்தனையோ போராட்டங்களில் கருணாநிதியுடன் ஈடுபட்டுள்ளேன். அண்ணா காலம் தொட்டு இன்று வரை கருணாநிதியுடன் எனது நட்பு தொடர்கிறது. தமிழ்ச் சமுதாயத்தின் தனிப்பெரும் தலைவர் கருணாநிதி.
நெஞ்சங்களில் இருப்பார்
மு.க.,ஸ்டாலின், கனிமொழி திமுகவை சிறப்பாக வழி நடத்துவார்கள். தமிழக மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் கருணாநிதி அமர்ந்திருப்பார். இவ்வாறு மதுரை ஆதீனம் பேசினார்.