மறைந்த பிறகும் தொடர்ந்த கருணாநிதி-ஜெயலலிதா மோதல்!
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா இருவருக்கும் நடுவேயான மோதல் கடைசி வரை தொடர்ந்தது.
எம்ஜிஆரின் மனைவி வி.என்.ஜானகி அம்மையாருடன் ஏற்பட்ட மோதலில், அதிமுகவின் இரட்டைஇலைச் சின்னத்தைக் கைப்பற்றினார் ஜெயலலிதா. 1988ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 27 சட்டமன்ற உறுப்பினர்களுடன் அதிமுக எதிர்க்கட்சியாக, வீற்றிருக்க, தமிழகச் சட்டமன்றத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவியாக ஜெயலலிதா அதிமுகவை வழிநடத்தினார்.
1989ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்த போது எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டார் ஜெயலலிதா.
சேலை கிழிப்பு
1989ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி, தமிழகச் சட்டமன்றத்தில் நடந்த அமளியில் ஜெயலலிதா சேலை இழுக்கப்பட்டதாகவும், உடல் ரீதியாகத் தாக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. தலைவிரி கோலமாக, கிழிந்த சேலையுடன் ஜெயலலிதா சட்டமன்றத்தை விட்டு வெளியே வந்த அந்தச் சம்பவத்தின் காட்சிகள் தமிழக மக்களிடையே குறிப்பாகத் தமிழ்நாட்டுப் பெண் வாக்காளர்களிடையே ஜெயலலிதாவுக்கு அனுதாபத்தை ஏற்படுத்தியது.
சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா
அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் அவருக்குத் தமிழக முதல்வராகும் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த காரணங்களில் இந்தச் சம்பவமும் முக்கிய இடம் வகித்தது. சொத்துக் குவிப்பு புகார் எழுந்ததால், 1996ஆம் ஆண்டு தேர்தலில் மோசமான தோல்வியடைந்தார் ஜெயலலிதா. இந்த வழக்கில் திமுகவின் பங்கும் அதிகம். 1996ல் டிசம்பர் 7ம் தேதி ஊழல் வழக்கிற்காக அவர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
நள்ளிரவு கைது
சிறையில் அடைத்ததன் காரணமாக, கருணாநிதி மீது அவரும் அவரது கட்சியினரும் கடைசிவரை கோபத்தை மறக்காமல் காண்பித்து கொண்டிருந்தனர். மீண்டும் விஸ்வரூபம் எடுத்து ஜெயலலிதா 2001ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றபோது, அடுத்தகட்டமாக செய்த வேலை, 2001-ம் வருடம் ஜூன் 30-ம் தேதியன்று அதிகாலையில் கருணாநிதியை கைது செய்ததுதான். மேம்பால ஊழல் வழக்கிற்காக கருணாநிதியை போலீசாரை அனுப்பி நள்ளிரவில் கைது செய்ததும், அது தொலைக்காட்சி சேனல்களில் மாறி மாறி காண்பிக்கப்பட்டதும் உலக பிரசித்தி.
பெரும் அடிதடி
தமிழகத்தில், 2006ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க. ஆட்சி அமைந்ததும், நடந்த முதல் சட்டசபை கூட்டத் தொடரே, சட்டசபை வரலாற்றில் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியது. 2006 மே 26ம் தேதி, சட்டசபையில் அ.தி.மு.க.,வினருக்கும், காங்கிரசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது, தி.மு.க.,வினரும், அ.தி.மு.க.,வினரும் மாறி மாறி வசைமாரி பொழிந்தனர். இந்த சமயத்தில் அ.தி.மு.க.,வினர், முதல் வரிசையில் அமர்ந்திருந்த அமைச்சர்களை அடிக்கப் பாய்ந்தனர். குறிப்பாக, தற்போது, தி.மு.க.,வில் சேர்ந்துள்ள சேகர்பாபு, அப்போதைய முதல்வர் கருணாநிதியை தாக்க பாய்ந்தார். இதனால், சபையில் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பின், அ.தி.மு.க., உறுப்பினர்கள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கருணாநிதிக்கு நாற்காலி வசதி
பிரச்னை ஏற்பட்ட சமயத்தில், ஜெயலலிதா சபையில் இல்லை. இதனால், அவரை சஸ்பெண்ட் செய்யவில்லை. இதன்பின், ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பறித்து, தானே எதிர்க்கட்சித் தலைவரானார் ஜெயலலிதா. அதோடு மட்டுமின்றி, சட்டசபைக்கு தனி ஆளாக வந்து, ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார். இதன்பிறகு 2011 மற்றும் 2016ம் ஆண்டு தேர்தல்களில் திமுகவால் வெற்றி பெற முடியவில்லை. கருணாநிதி சட்டசபை வருவதில்லை. அவர் சக்கர நாற்காலி வந்து செல்லும் அளவுக்கு வசதி ஏற்படுத்தி தரவில்லை என்ற குற்றச்சாட்டு ஆளும் கட்சி மீது உண்டு.
தலைமைச் செயலகம் மாற்றம்
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் திமுக ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. பின்னர் வந்த அதிமுக அரசு அதை பயன்படுத்தாமல், பழைய தலைமைச் செயலகத்தையே பயன்படுத்தியது. புதிய தலைமைச் செயலகத்தை பல்நோக்கு நவீன சிறப்பு மருத்துவமனை மற்றும் மருத்துவமனையாக அரசு மாற்ற இருப்பதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
மறைந்த பிறகும் மோதல்
கருணாநிதி மறைவின்போது, அவருக்கு மெரினாவில் இடம் அளிக்க அதிமுக அரசு மறுத்துவிட்டது. கருணாநிதி மறைந்த பிறகும்கூட ஜெயலலிதா உருவாக்கிய அந்த மோதல் போக்கு கருணாநிதியை தொடரத்தான் செய்தது என்பதற்கு இது ஒரு உதாரணம். திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட பிறகுதான், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.