ஆர்.எஸ்.எஸ். தலைவரின் பேச்சை தூர்தர்ஷன் ஒளிபரப்புவதா?: கருணாநிதி கண்டனம்
சென்னை: ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் மோகன் பகவத்தின் பேச்சை அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பியது முறையல்ல என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில், விஜயதசமி விழா மற்றும் அந்த இயக்கத்தின் ஆண்டு விழா நாக்பூரில் நடைபெற்ற போது, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகாவத் ஆற்றிய உரையை மத்திய அரசுக்குச் சொந்தமான தூர்தர்ஷன் சுமார் ஒரு மணி நேரம் நேரடி ஒளிபரப்பு செய்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ். என்பது சர்ச்சைக்குரிய மத அடிப்படைவாத அமைப்பு. அதன் தலைவரின் பேச்சை தூர்தர்ஷன் நேரடியாக ஒரு மணி நேரத்திற்கு ஒளிபரப்பியது முறையல்ல. மற்ற கட்சிகளின் சார்பில் அதற்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. சார்பில் என்னுடைய கண்டனத்தையும் தெரிவிக்கின்றேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.