விடுதலையாயிட்டேன் அப்பா... சொன்ன கனிமொழி... முத்தம் கொடுத்து வாழ்த்திய கருணாநிதி
வழக்கில் இருந்து விடுதலையானதாக கூறி தந்தை கருணாநிதியிடம் ஆசி பெற்ற கனிமொழிக்கு முத்தம் கொடுத்து வாழ்த்தினார் கருணாநிதி.
சென்னை: கோபாலபுரத்தில் தந்தை கருணாநிதியிடம் ஆசி பெற்றார் கனிமொழி. விடுதலையாகி விட்டதாக கூறிய கனிமொழியை சிரித்தபடியே முத்தம் கொடுத்து ஆசி வழங்கினார் கருணாநிதி.
2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்ட அனைவரும் இந்த வழக்கில் இருந்து விடுக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய கனிமொழி, ஆ.ராசாவிற்கு தொண்டர்கள் பூ மழை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திற்கே வந்து தங்கை கனிமொழியை வரவேற்றார் ஸ்டாலின். தொண்டர்களின் வரவேற்பில் கனிமொழியும், ஆ. ராசாவும் திக்குமுக்காடிப் போயினர்.
களை கட்டிய கோபாலபுரம்
கோபாலபுரத்தில் தொண்டர்கள் குவிந்துள்ளதால் திருவிழா கோலம் பூண்டுள்ளது. பூக்கள், தோரணங்கள் என கனிமொழி வசித்து வரும் சிஐடி காலனி வீடும் களைகட்டியுள்ளது. வாழ்த்து கோஷமிட்டு கனிமொழியை வரவேற்றனர்.
கருணாநிதியிடம் ஆசி
வழக்கில் இருந்து விடுதலையான கனிமொழியும், ஆ.ராசாவும் தொண்டர்கள் மத்தியில் நீந்தி வந்து கோபாலபுரத்தில் திமுக தலைவர் கனிமொழியிடம் ஆசி பெற்றனர். கோபாலபுரத்தில் அனைவருக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முத்தமிட்ட கருணாநிதி
வழக்கில் இருந்து விடுதலை பெற்றதை தனது தந்தையின் காதில் கூறி ஆசி பெற்றார் கனிமொழி. அப்போது, நிசமாவா என்று கேட்டு சிரித்தபடியே கனிமொழிக்கு முத்தமிட்டார் கருணாநிதி. கனிமொழிக்கு பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட்டது.
முத்தமிட்ட ஆ.ராசா
இதனையடுத்து ஆ. ராசாவும் தலைவர் கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்தி ஆசி பெற்றார். அப்போது கைகளில் முத்தமிட்டு ஆசி பெற்றார். ஆ.ராசாவிற்கு ஆள் உயர மாலை அணிவித்தனர். அப்போது அருகில் இருந்த துரைமுருகன், கருணாநிதியின் காதருகே சென்று, ராசாவும் விடுதலையாகிட்டார் என்று சத்தம் போட்டு கூறவே சிரித்தார்.