தொகுதி பங்கீடு, பிரசார வியூகம், வேட்பாளர்கள்... 65 மா.செ.க்களுடன் கருணாநிதி ஆலோசனை
சென்னை: சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க கூடிய தொகுதிகள், வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் மற்றும் பிரசார வியூகம் குறித்து 65 மாவட்ட செயலாளர்களுடன் திமுக தலைவர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ. ஆகியவை அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளன. மேலும் சில கட்சிகள் திமுக கூட்டணியில் இணையக் கூடும் என தெரிகிறது.
திமுகவைப் பொறுத்தவரையில் 180 முதல் 190 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருக்கிறது. காங்கிரஸுக்கு 25 முதல் 30 தொகுதிகளை ஒதுக்கக் கூடும். எஞ்சிய தொகுதிகளை இதர கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கும்.
தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணலை நடத்திய போது எந்த மாவட்ட செயலாளரையும் திமுக தலைமை உடன் இருக்க அனுமதிக்கவில்லை. மாவட்ட செயலாளர்கள் விரும்புகிறவர்கள்தான் போட்டியிட முடியும் என்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே திமுக தலைமை இப்படி ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. இது திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தையும் கொடுத்தது.
இந்நிலையில் சென்னையில் 65 மாவட்ட செயலாளர்களுடன் திமுக தலைவர் கருணாநிதி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள், கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கலாம், பிரசார வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதேபோல் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் யார் என்ற விவரங்களையும் மாவட்ட செயலாளர்களிடம் கருணாநிதி கேட்டதாக தெரிகிறது. தற்போது தேர்தல் அறிக்கை இறுதி செய்யும் பணி நடந்து வருவதால், அதுகுறித்தும் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் திமுக பொதுச்செயலர் அன்பழகன், பொருளாளர் மு.க. ஸ்டாலின், ராஜ்யசபா எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.