ராஜாஜி, காமராஜருக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க இடம் தர மறுத்தாரா கருணாநிதி? உண்மை என்ன?
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது முன்னாள் முதல்வர்களான ராஜாஜி மற்றும் காமராஜர் ஆகியோர் நினைவிடத்தை மெரினாவில் அமைக்க மறுப்பு தெரிவித்ததாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த தகவல் உண்மைதானா, இதன் பின்னணி என்ன என்று பார்க்கலாம்.
மூதறிஞர் என்று அழைக்கப்படும் ராஜாஜி 1972ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மறைந்தார். இதேபோல கர்ம வீரர், காமராஜர் 1975ம் ஆண்டு அக்டோபர் மாதம் மண்ணுலக வாழ்க்கையை நிறைவு செய்தார்.
இவ்விரு தலைவர்களின் நினைவிடங்களும், சென்னை காந்தி மண்டபம் பகுதியில் உள்ளன. அந்த காலகட்டத்தில் முதல்வராக இருந்த கருணாநிதி தான் மெரினாவில் இவ்விரு தலைவர்கள் நினைவிடம் அமைவதற்கு இடம் தரவில்லை என்று என்ற விமர்சனம் தான், தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தமிழக அரசின் வாதம்
கருணாநிதியை நல்லடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கித் தரும்படி திமுக தரப்பு ஹைகோர்ட்டில், தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூட, காமராஜர் ஒரு பெருந்தலைவர் என்ற போதிலும், முன்னாள் முதல்வர் என்பதால் அவருக்கு மெரினாவில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது இடம் ஒதுக்கவில்லை என்ற வாதம் குறிப்பிடப்பட்டிருந்தது.
ராஜாஜிக்கு இடம் கேட்கவில்லை
இதுகுறித்து 'தி நியூஸ் மினிட்' இணையதளத்துக்கு ராஜாஜியின் கொள்ளுப்பேரன் சி.ஆர்.கேசவன் அளித்த பேட்டியில், ராஜாஜிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க கருணாநிதி மறுத்ததாக வெளியாகியுள்ள தகவல் தவறானது என்று தெரிவித்துள்ளார். ராஜாஜியின் விருப்பப்படியே அவரது உடல் எரியூட்டப்பட்டது என்றும், அவர் தெளிவுபடுத்தியுள்ளார். கருணாநிதியால் தான் கிண்டியில் ராஜாஜி நினைவாலயம் அமைக்கப்பட்டது என்று கூறும் கேசவன், ராஜாஜிக்கும் கருணாநிதிக்கும் நல்ல உறவு இருந்ததாகவும் நினைவு கூர்ந்துள்ளார்.
காமராஜருடன் நட்பு
அதேநேரம் காமராஜர் விவகாரத்தில்தான் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.. மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் கூறுகையில், காமராஜர் மறைந்த பிறகு மெரினாவில் நினைவிடம் அமைக்க வேண்டும் என்று, கோரிக்கைகள் எதுவும் கருணாநிதிக்கு விடுக்கப்படவில்லை. காந்தி ஜெயந்தி அன்று காமராஜர் மரணம் அடைந்தார், எனவே காந்தி மண்டபத்தில் அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. எமர்ஜென்சி காலத்தில் கூட காமராஜருக்கு கருணாநிதி மிகுந்த ஆதரவு அளித்தார் என்று தெரிவித்தார்.
திண்டிவனம் ராமமூர்த்தி குற்றச்சாட்டு
ஆனால் 'தி ஹிந்து' நாளிதழ் காங்கிரஸ் மூத்த தலைவர், திண்டிவனம் கே.ராமமூர்த்தி கூறியதாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில் பழ.நெடுமாறன், கண்ணதாசன், மற்றும் ஜெயகாந்தன் ஆகியோர், மெரினாவில், காமராஜர் உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இருந்தனர் என்று கூறியுள்ளார் கே.ராமமூர்த்தி. ஆனால் கருணாநிதி இந்த கோரிக்கையை நிராகரித்து விட்டதாகவும், ஏற்கனவே கடற்கரை அருகே அமைந்து உள்ளதால் அண்ணாவின் நினைவிடத்தை பராமரிப்பது மிகவும் சிரமமாக இருப்பதாகவும், எனவே காமராஜருக்கு காந்தி மண்டபத்தில் நினைவிடம் அமைக்கலாம் என்றும் கருணாநிதி தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதேநேரம் முன்னாள் முதல்வருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கீடு செய்ய முடியாது என்று கருணாநிதி குறிப்பிட்டாரா என்ற கேள்விக்கு அப்படி எதுவும் அவர் குறிப்பிடவில்லை, என்று திண்டிவனம் கே.ராமமூர்த்தி தெரிவித்ததாக அந்த நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது.
பழ.நெடுமாறன் மறுப்பு
தமிழர் தேசிய முன்னணி தலைவரும், காமராஜர் மறைந்தபோது, தமிழக காங்கிரஸ் செயலாளராக இருந்தவருமான, பழ.நெடுமாறனோ, இந்த தகவலை மறுத்துள்ளார். 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. பழ.நெடுமாறன் கூறியதாக அந்த செய்தியில் கூறியிருப்பதாவது: காமராஜர் மறைந்ததும், சத்தியமூர்த்தி பவனில் அவருக்கு இறுதி சடங்குகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், அப்போதைய முதல்வர் கருணாநிதிதான், காமராஜர் ஒரு சுதந்திர போராட்ட வீரர் என்பதால், காந்தி மண்டபத்தில் வைத்து இறுதி சடங்குகள் செய்யுங்கள், அதுவே பொருத்தமாக இருக்கும் என முன்வந்து கூறினார். அங்குதான், காமராஜர் உடல் தகனம் செய்யப்பட்டது. மேலும், காந்தி மண்டபத்தில், காமராஜருக்கு நினைவிடம் அமைக்க நிலம் அளித்தவரும் கருணாநிதிதான். மெரினாவில் காமராஜருக்கு இடம் ஒதுக்க காங்கிரஸ் சார்பில் கோரிக்கைவிடுக்கப்படவில்லை. இப்போதுள்ள தலைமுறையினர், பேஸ்புக், வாட்ஸ்அப்பில் அறியாத கருத்துக்களை பரப்பி அதை உண்மை என நினைக்கிறார்கள். உண்மையை கண்டறிய அக்கறை காட்டுவதில்லை. இவ்வாறு பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.