For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

3 அதிமுகவினருக்கு தூக்கு கூடாதுதான்... 3 மாணவிகள் பெற்றோர் மனமும் ஆறுதலடைய வேண்டும்: கருணாநிதி

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் 3 அதிமுகவினருக்கு தூக்கு தண்டனை விதிக்க கூடாது என்ற போதும் பலியான 3 மாணவிகளின் பெற்றோர் மனமும் ஆறுதலடைய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:

13-5-2013 அன்று பேரவையில் கொண்டு வரப்பட்ட சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றுக்குப் பதிலளித்த முதலமைச்சர் ஜெயலலிதா, முன்னரே தயாரிக்கப்பட்ட வாசித்த அவருடைய நீண்ட சொற்பொழிவை முடிக்கும்போது, "பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கைச் சீரழிக்கும் வண்ணமும், வன்முறைச் செயல்களில் எந்தக் கட்சி ஈடுபட்டாலும், அந்தக் கட்சியை தடை செய்ய இந்த அரசு தயங்காது, நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்" என்று தெரிவித்திருந்தார்..

Karunanidhi on SC commute death penalty of 3 convicts

கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் கொல்லப்பட்டது பல ஆண்டுகளுக்கு முன்பு என்பதால், அதுபற்றிய விளக்கத்தைச் சற்று விரிவாக நினைவுபடுத்துவது அவசியமென்று கருதுகிறேன். கொடைக்கானலில் அரச வரையறை செய்திருக்கும் வளர்ச்சி கட்டுப்பாட்டு விதிகளை மீறி ஏழு மாடிகள் கொண்ட "பிளசண்ட் ஸ்டே" ஓட்டலுக்கு சட்ட விரோதமாக அனுமதி அளித்தது தொடர்பாக, கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் சார்பில் இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட சிலர் மீது வழக்கு நடைபெற்று 2-2-2000 அன்று வழக்கை விசாரித்த இரண்டாவது தனி நீதிபதி இராதாகிருஷ்ணன் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்து கொள்ள அனுமதி அளிக்கும் வகையில் 3-3-2000 வரை தீர்ப்பின் அமலாக்கத்தை நிறுத்தியும் வைத்தார். ஆனால் அன்று நடைபெற்றது என்ன?

இந்தத் தீர்ப்பு கூறப்பட்டவுடன், நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக கூடியிருந்த அ.தி.மு.க. வினர் அங்கேயே வன்முறையில் இறங்கினர். அந்த வழியாக வந்த பேருந்துகளை அடித்து நொறுக்கினார்கள். அங்கிருந்த கடைகள் மீது கல் வீசித் தாக்கியதோடு கடைகளைச் சூறையாடினர்.

இதனால் அந்தப் பகுதி மக்கள் பெரும் பீதிக்கு ஆளானார்கள். அங்கு மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் வன்முறையில் இறங்கினர். ஆங்காங்கே பேருந்துகளை தீ வைத்துக் கொளுத்துவது, கடைகளை சூறையாடுவது போன்ற அராஜகத்தில் ஈடுபட்டார்கள்.

தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கைச் சல்லிக் காசுக்குக் கூட மதிக்காமல் அதிமுகவினர் பொது அமைதிக்குப் பெரும் பங்கம் ஏற்படுத்தினர்.

அப்போது கோவை வேளாண்மைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இரண்டு பேருந்துகளில் கிருஷ்ணகிரி அருகே உள்ள பையூர் வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு செய்து விட்டு கோவைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அந்தப் பேருந்துகளைத் தான் அ.தி.மு.க. வினர் வழி மறித்துத் தாக்க முற்பட்டனர்.

தங்களை விட்டு விடுமாறு மாணவிகள் கெஞ்சியும் கேளாமல், பெட்ரோல் குண்டுகளை அந்தப் பேருந்துகளின் மீது வீசி மாணவிகளை உள்ளேயே வைத்து உயிரோடு கொளுத்தப்பட்ட காரணத்தால் மூன்று மாணவிகள், நாமக்கல்லைச் சேர்ந்த கோகிலவாணி, விருதாசலத்தைச் சேர்ந்த காயத்ரி, சென்னையைச் சேர்ந்த ஹேமலதா ஆகியோர் எரிந்து சாம்பலானார்கள். மேலும் 17 மாணவிகள் தீக்காயமடைந்தனர்.

இந்தச் செய்தியினைத் தொடர்ந்து தமிழக மாணவர்கள் எல்லாம் கொதித்தெழுந்தனர். 5-11-2001இல் வழக்கு விசாரணை தர்மபுரி அமர்வு நீதி மன்றத்தில் தொடங்கியது. 22 பேர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டனர்.

அதிமுக ஆட்சி என்பதால், 20 சாட்சிகள் தடம் புரண்டனர். இதனை எதிர்த்து இறந்து போன கோகில வாணியின் தந்தை வீராசாமி சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். 20-9-2003 அன்று உயர்நீதி மன்ற நீதிபதி கனகராஜ் அளித்த தீர்ப்பில் முக்கிய பகுதி வருமாறு :

"வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவ்வழக்கை அனாதைக் குழந்தையைப் போல போலீஸ் அதிகாரிகள் நடத்தியுள்ளனர். போலீஸ் மீதான நம்பிக்கை, நன் மதிப்பைக் குலைக்கும் வகையில் அவர்கள் நடந்துள்ளனர்.

இந்த இமாலயத் தவறுக்காக உள்துறைச் செயலாளர் மற்றும் சி.பி., சி.ஐ.டி. கூடுதல் எஸ்.பி. ஆகியோரை இந்த நீதி மன்றம் கண்டிக்கின்றது. அரசு தரப்பு சாட்சியங்களைக் கலைப்பதற்கு அனுமதி அளித்த குற்றத்துக்காக சி.பி., சி.ஐ.டி., கூடுதல் எஸ்.பி. மீது, அதன் ஐ.ஜி. ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டத்தின் வலிமையையும், கம்பீரத்தையும் நிலைநாட்டவும், இவ்வழக்கில் நியாயமான, சுதந்திரமான விசாரணை நடைபெறவும், இவ்வழக்கு தர்மபுரி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் இருந்து சேலம் மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதி மன்றத்துக்கு மாற்றப்படுகிறது.

தவறான சாட்சியம் அளித்தது, பொய்யான அறிக்கையில் கையெழுத்திட்டது, வழக்கில் சம்பந்தப் பட்ட ஆதாரங்களை அழிக்கக் காரணமாக இருந்தது, குற்றவாளிகள் சட்டப் பூர்வ நடவடிக்கையில் இருந்து தப்பிக்கக் காரணமாக இருந்தது போன்ற குற்றங்களுக்காக விருப்பாட்சிபுரம் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அலுவலர்கள் மீதான நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் அவர்கள் நடந்து கொண்டது, கீழ்த்தரமானது, வெட்கப் படக்கூடியது" என்று உயர்நீதி மன்ற நீதிபதி கனகராஜ் அவர்கள் கூறியுள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் எவ்வளவு கடுமையானவை!

ஆனால் அதற்குப் பிறகும் சேலம் நீதி மன்றத்தில் வழக்கு துவங்கவே இல்லை. கோகிலவாணியின் தந்தை மீண்டும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பாக அரசு முறையான உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றும், வழக்கு விசாரணையும் ஐகோர்ட்டு உத்தரவுப்படி விரைவாக நடக்க வில்லை என்றும் தனது மனுவிலே குறிப்பிட்டிருந்தார். இந்த மனு குறித்த வழக்கு 17-2-2005 அன்று வந்த போது, அரசு வழக்கறிஞர் துரைசாமி தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்கள் காணாமல் போய் விட்டதாகவும், கோர்ட்டு ஊழியர்கள் அவற்றைத் தேடி வருகிறார்கள் என்றும், காணாமல் போன ஆவணங்களைப் புதுப்பிக்க காலம் வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

இதன் மீது நீதிபதி கனகராஜ், "3 மாணவிகள் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர். தமிழக அரசு இந்த விஷயத்தில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறது. 3 நாட்களுக்குள் கோப்புகளைக் கண்டுபிடித்து வழக்கு விசாரணையை துரிதமாக நடத்த வேண்டும். தவறினால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவேன்" என்று அரசின் காவல் துறைக்கு எச்சரிக்கை விடுத்தார். அதன்பிறகு இந்த வழக்கு 18-2-2005 அன்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி கனகராஜ் தெரிவித்த கண்டனம் வருமாறு :-

"மாணவிகளை எரித்த வழக்கை சேலம் கோர்ட்டு விரைவாக நடத்த வேண்டும் என்று உத்தர விட்டிருந்தோம். ஆனால் அதைச் செய்யவில்லை. கடந்த 15 மாதங்களாக வழக்கு கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு விசாரணையை நடத்தாமல் ஏன் இருந்தீர்கள் என்று தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இதில் அரசு வக்கீல் மீது அதிகமாக குற்றம் சாட்ட விரும்பவில்லை. ஐகோர்ட்டு உத்தரவிட்ட நாள் முதல் இதுவரை இந்த வழக்கு விசாரணை நடத்தப்படவில்லை. கோர்ட்டு உத்தரவிட்ட பிறகு இதுவரை தமிழகத்தில் எந்தெந்த உள்துறைச் செயலாளர்கள் பொறுப்பில் இருந்தார்களோ அவர்கள் அனைவரும் இந்த வழக்கின் தாமதத்திற்கு காரணம் என்ன என்று விளக்கம் அளித்து அடுத்த வாரம் 27ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த வழக்கின் ஒவ்வொரு நாள் தாமதத்திற்கும் காரணம் என்ன என்றும் பதிலளிக்க வேண்டும்" என்று நீதிபதி கனகராஜ் உத்தரவிட்டார். அவர் இப்படி உத்தரவிடும் அளவிற்கு அ.தி.மு.க. ஆட்சியில் அந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டது.

இவ்வளவுக்கும் பிறகு 2007இல் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அதிமுக வைச் சேர்ந்த முனியப்பன், ரவீந்திரன், ஒன்றிய செயலாளர் நெடுஞ் செழியன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதி மன்றம் அதே ஆண்டில் உத்தரவிட்டது.

அந்த உத்தரவிற்கும் தடை விதிக்கக் கோரி குற்றவாளிகள் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதி மன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தும், தூக்குத் தண்டனையை உறுதி செய்தும் 2010இல் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து குற்றவாளிகள் சார்பில் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்யப் பட்டதோடு, உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் செய்யக் கோரி குற்றவாளிகள் சார்பில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தான் தற்போது உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் ஏற்கனவே இவர்களின் கருணை மனுக்கள் நிலுவையில் உள்ள பட்சத்தில் தண்டனையைக் குறைத்தால் அது குற்றவாளிகளுக்கு இரட்டை சலுகைகள் வழங்கியது போல் ஆகி விடுமே என்று கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் குற்றவாளிகளின் சீராய்வு மனுவினை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்துள்ளார்கள்.

மரண தண்டனையே கூடாது என்பது தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்து என்பதை நான் பல முறை கூறி யிருக்கிறேன். எனவே அ.தி.மு.க. வினர் மீதுள்ள தண்டனை என்பதால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று நான் கூற மாட்டேன். அது யாராக இருந்தாலும் மரண தண்டனை கூடாது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் ஆளுங் கட்சிக்காரர்கள் என்பதால், சட்டம் வளைந்து நெளிகிறதோ என்ற எண்ணம் யாருக்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அந்தச் சம்பவத்தில் மறைந்து விட்ட மூன்று மாணவிகளின் பெற்றோரின் மனம் ஆறுதலும் அமைதியும் பெற வேண்டும். விநோதமாக இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், தான் எதுவும் கூற விரும்பவில்லை என்றும், நீதிபதிகளே முடிவு செய்யலாம் என்று கூறியிருக்கிறார்.

அதைக் கூட "டைம்ஸ் ஆப் இந்தியா" நாளேடு, "Interestingly, Tamil Nadu Government, which is the prosecuting state, had left the matter to the bench to decide the case on merits" என்றே சுட்டிக் காட்டியுள்ளது. தீர்ப்பில் நீதியும், நியாயமும் உள்ளடங்கி இருப்பதாக ஒரு தோற்றம் உருவாகி இருக்க வேண்டும். இந்த வழக்கில் அவை அனைத்தும் அடங்கி அப்படிப்பட்ட தோற்றமாவது உருவாகி இருக்கிறதா என்பதை இதைப் படிப்போர் சிந்தித்துப் பார்த்தாலே போதுமானது!

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK leader raised doubts over the commute death penalty of 3 ADMK cadres.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X