ஓய்வுக்கே ஓய்வளித்தவர்.. விடை பெற்றுச் சென்றார் ஓய்வறியா உதயசூரியன் கருணாநிதி!
திமுக தலைவர் கருணாநிதி காலமானார்.
சென்னை: உலகின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார்.
வயது மூப்பு காரணமாக, கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கருணாநிதி சென்னையில் காலமானார். 95 வயதான கருணாநிதிக்கு கடந்த 2 வருடங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. அதற்காக அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார் கருணாநிதி.
மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில், 25ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் போனதால், கோபாலபுர இல்லத்திலேயே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் ரத்த அழுத்தம் காரணமாக 27 ம் தேதி அதிகாலை 1.30 மணி அளவில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 11 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி திமுக தலைவர் கருணாநிதி இன்று உயிரிழந்தார்.
தீவிர அரசியல்
திருவாரூர் மாவட்டம் அருகில் உள்ள திருக்குவளையில் முத்துவேல்- அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாக 1924-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி பிறந்தார். கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி என்பதாகும். தன் 14 வயதில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு அதற்கு பிறகு அரசியலில் ஈடுபட்டார்.
குளித்தலை வெற்றி
அதன்பின்னர் தமிழகத்தில் திராவிடர் இயக்க மாணவர் அணியை முதல் முதலாக தொடங்கினார். படிப்படியாக கட்சியில் தன்னை உயர்த்தி கொண்டார். 1957-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தார். அதற்கென குளித்தலையில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன், சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைத்தார். அன்றுமுதல் சட்டமன்றத்தில் கருணாநிதியுடன் திமுகவும் சேர்ந்தே பயணித்தது.
5 முறை முதல்வர்
1967-ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தல் மூலம் ஆட்சியில் அமர்ந்தார். 1957-ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 50 ஆண்டுகளாக தி.மு.க.வின் தலைவராகவும் பதவி வகித்து வந்தார். தமிழகத்தின் முதல்வராக ஐந்துமுறை கருணாநிதி பதவி வகித்தார். திமுக என்ற கட்சியின் தலைவராக 50 ஆண்டுகள் பதவியை வகித்துள்ளார். போட்டியிட்ட அனைத்து தேர்தல்களில் வெற்றி பெற்றவர் என்ற பெருமைக்குரியவரானார் கருணாநிதி. ஓய்வுக்கே ஓய்வு கொடுத்தவர் என பாராட்டு பெற்றவரான கருணாநிதியின் உயிர் மண்ணைவிட்டு பிரிந்தது.