அனைத்து ஜாதியினர் அர்ச்சகராவது தொடர்பான தீர்ப்பு குறித்து ஆராய்ந்து முடிவு செய்வோம்:கருணாநிதி
சென்னை: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆராய்து முடிவு செய்வோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இந்து கோயில்களில் அர்ச்சகர்களை ஆகம விதிகளின்படிதான் நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்,
செய்தியாளர்: உச்ச நீதிமன்றம் இன்று அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராக ஆக முடியாது என்று தீர்ப்பு தந்திருக்கிறது. தொடர்ந்து திமுக அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராக ஆவது பற்றி குரல் கொடுத்து வந்திருக்கிறது. இந்த நிலையில் இன்று வந்துள்ள தீர்ப்பை தாங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக ஆவது பற்றி நாங்களும் குரல் கொடுத்தோம், கொடுத்து வருகிறோம். தளபதி கி. வீரமணி அவர்களும் எங்களைப் போலவே குரல் கொடுத்து வருகிறார். அவரும், நானும் மற்றும் அர்ச்சகர் சட்டத்தைப் பற்றி ஆதரவாக பேசி வருபவர்களும் கலந்து பேசி எந்த வகையிலே உச்ச நீதி மன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்த்து, அதன் பிறகு முடிவு செய்வோம். ஆண்டவனை வணங்கு வதிலும், அர்ச்சிப்பதிலும் வேறுபாடு இருக்கக் கூடாது, உயர்வு தாழ்வு இருக்கக் கூடாது என்பதிலே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அழுத்தமான கொள்கை உண்டு. அந்த அடிப்படையில் இந்தத் தீர்ப்பை ஆராய்ந்து பார்த்து ஆவன செய்வோம்.
செய்தியாளர்: தீர்ப்பை எதிர்த்து போராட்டம் நடத்தப்படுமா? மேல் முறையீடு செய்ய வாய்ப்பு இருக்கிறதா?
பதில்: உரிய நேரத்தில் உரிய முறையில் யோசித்து செயல்படுவோம். இவ்வாறு கருணாநிதி பதில் அளித்தார்.