எம்.ஜி.ஆரின் முடிவு தவறானது என்பதை உணர்த்தியவர் கருணாநிதி- கனிமொழி
திருச்சி: எம்.ஜி.ஆர்., காலத்தில், பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு என்று ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது. அப்போது நடந்த தேர்தலில், இப்பிரச்னையை முன்வைத்து திமுக களத்தில் இறங்கியது. இதில், திமுக கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. இதன் மூலம், எம்.ஜி.ஆரின் முடிவு தவறானது என கருணாநிதி உணர்த்தினார் என்று கூறியுள்ளார் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி.
திருச்சி திமுக மாநாட்டில் இன்று 2ம் நாள் கூட்டத்தின்போது கனிமொழி பேசினார். அப்போது அவர் கூறுகையில், சமூக நீதி என்பது அனைவரும் சமம். ஆனால், நமது சமூகத்தை பல பிரிவுகளாக பிரித்து வைத்து இருக்கிறோம். இந்திய ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டிருந்த காலத்தில், ஆங்கிலேயர்கள் அத்தனை பதவிகளையும் அவர்களே வைத்துக் கொண்டிருந்தனர். இந்தியர்களுக்கு பதவி கொடுக்க அவர்கள் முன்வந்தபோது, எல்லா பதவிகளையும் ஒரே சமூகத்தினர் பெற்றுக் கொண்டனர். அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டார்கள்.
தமிழகத்தில் நீதிக்கட்சி என்று, திராவிட கழகம் உருவாக்கப்பட்டது. 1928ம் ஆண்டு வரை, ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்கள், உரிமைகள் பெறுவதற்கு தடையாக இருந்தனர். பல போராட்டங்களுக்கு பின்னர் வகுப்பு வாத உரிமை கிடைத்தது.
இதையடுத்து, ஒதுக்கி வைக்கப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பதவி கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. ஜாதியின் பெயரால் எல்லாம் மறுக்கப்பட்டது. எம்.ஜி.ஆர்., காலத்தில், பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு என்று ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது. அப்போது நடந்த தேர்தலில், இப்பிரச்னையை முன்வைத்து தி.மு.க., களத்தில் இறங்கியது. இதில், தி.மு.க., கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. இதன் மூலம், எம்.ஜி.ஆரின் முடிவு தவறானது என கருணாநிதி உணர்த்தினார்.
அதிமுக என்பது இட ஒதுக்கீட்டுக்கும், சமூக நீதிக்கும் உடன்பாடாக எப்போதுமே இருந்ததில்லை. திமுக மட்டுமே அதில் உறுதியாக இருந்தது. சமூக நீதியை காப்பாற்ற வேண்டும் என்று எல்லா காலத்திலும் திமுக செயல்பட்டு வருகிறது. அத்தனை சமூகத்தினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இயற்றியவர் கருணாநிதி.
ஏற்றத்தாழ்வு இல்லை என்ற நிலை வேண்டும். சாதி, மதம், நிற, பண ரீதியாக உள்ள சமூக ஏற்ற தாழ்வுகளை சமூகம் சந்தித்து கொண்டிருக்கிறது. இவைகள் களையப்பட வேண்டும். ஜெயலலிதா ஆட்சியில் இடஒதுக்கீடு இல்லை.
திமுகவிற்கும், அதிமுகவிற்கும் தேர்தல் பகை இல்லை, பரம்பரை பகை தான் உள்ளது என்கிறார் ஜெயலலிதா. இது எதை குறிக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
முன்பு சமூக நீதிக்காக எழுந்த போராட்டம் போல் மீண்டும் தமிழகத்தில் புரட்சி ஏற்பட வேண்டும். இல்லாவிட்டால் நம் குழந்தைகள் படிப்பதற்கு பள்ளிகள் இருக்காது. உரிமையோடு வாழ இயலாது. எனவே சமூக நீதி காக்க, ஆதிக்கமற்ற சமூதாயம் உருவாக வரும் தேர்தலில் நாற்பதற்கு நாற்பதையும் நாம் வெல்ல வேண்டும் என்றார் கனிமொழி.