இங்கேயும் ஒரு அரசு இருக்கிறது.. முல்லைப் பெரியாறு பிரச்சினையில் என்ன நிலைப்பாடு.. கேட்கிறார் கருணாநி
சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் மழை வெள்ளத்தில் சிக்கி்த் தவித்து வரும் நிலையில் முல்லைப் பெரியாறு பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு கேரள அரசு அரசியல் செய்து வரும் நிலையில், அந்தப் பிரச்சினை குறித்த தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுள்ளார்.
தமிழக அரசு முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக தற்போது என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்று கருணாநிதி அறிக்கை ஒன்றில் வினவியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
உம்மன் சாண்டி பேச்சு
கேரள முதல்வர் உம்மன் சாண்டி, 9-12-2015 அன்று நடைபெற்ற தனது அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தம் 999 வருடத்திற்குப் போடப்பட்டுள்ளது. இந்த அணை 999 வருடங்களுக்கு உடையாமல் இருக்கும் என தமிழக அரசால் உறுதியளிக்க முடியுமா? எனவே புதிய அணை கட்டியே தீர வேண்டும். புதிய அணை இன்றே வேண்டும் எனக் கேரளா கூறுகிறது.
வேடிக்கை பார்க்க முடியாது
நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்காகக் கையைக் கட்டிக் கொண்டு சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. புதிய அணை கட்டுவதற்குச் சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் கேரளா மேற்கொள்ளும். இதற்காக நானும், நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பி.ஜே. ஜோசப்பும் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் உமாபாரதி ஆகியோரைச் சந்தித்துப் பேச உள்ளோம் என்று தெரிவித்ததோடு, முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் உம்மன் சாண்டி டெல்லியிலே உள்ள கேரள அரசு இல்லத்தில் ஆலோசனையும் நடத்தியிருக்கிறார்.
அது மாத்திரமல்ல
அது மாத்திரமல்ல; கேரள முதல்வர், திருவனந்தபுரத்தில் பேட்டி கொடுத்ததோடு இந்தப் பிரச்சினையை விட்டு விடவில்லை. நேற்றைய தினம் (11-12-2015) டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்து, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார். பிரதமரைச் சந்தித்து விட்டு, செய்தியாளர்களிடம் கூறும்போது, "முல்லைப் பெரியாறு அணை தனது உறுதியை இழந்துள்ளது. இந்த அணை உடையுமானால் சென்னை போல கேரள மாவட்டங்கள் மூழ்கி விடும்.
தீர்வு காண வேண்டும்
இந்த விவகாரத்தில் புதிய அணை கட்டுவதே ஒரே தீர்வு. இதுகுறித்து பிரதமரைச் சந்தித்து விரிவாக எடுத்துரைத்தோம். முல்லைப்பெரியாறு தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக உள்ளோம். சென்னையைப் போல வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிறகு கவலைப்படுவதை விட தற்போதே அதற்கான தீர்வு காண வேண்டும். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் பிரதமர் நேரடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம். மேலும் தற்போது உள்ள அணையின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய, தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து, அணையின் உறுதி மற்றும் பாதுகாப்பு நிலை குறித்து ஆய்வு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
ஐவர் குழு
ஏற்கனவே 2012ஆம் ஆண்டில், நில நடுக்கம் ஏற்பட்டால், முல்லைப் பெரியாறு அணை உடைந்து லட்சக்கணக்கான மக்கள் நீரில் மூழ்கி விடுவார்கள் என்று கேரள அரசு கூறியது. அது குறித்து விசாரித்து வந்த நிபுணர் குழு தனது அறிக்கையில் நில நடுக்கம் ஏற்பட்டால் முல்லைப் பெரியாறு அணைக்கு எள்ளளவும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தது. அதன் பின்னர், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் ஐவர் குழுவை உச்சநீதிமன்றமே அமைத்தது.
திடீரென பிரச்சினையைக் கிளப்பும் கேரளா
அந்த ஐவர் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி ஏ.ஆர். லெட்சுமணன் அவர்களும் இடம் பெற்றிருந்தார். அந்தக் குழு பல்வேறு நிபுணர்களின் ஆய்வறிக்கைகள் மற்றும் நேரடியான ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் விசாரித்தறிந்தது. 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதியன்று ஐவர் குழு தனது அறிக்கையை உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் முல்லைப் பெரியாறு அணை அனைத்து அம்சங்களிலும் உறுதியாக இருப்பதாகவும், வேறு அணை கட்டத் தேவையில்லை என்றும், அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்குப் பிறகு அமைதியாக இருந்த கேரள அரசு தற்போது திடீரென்று புதிய அணை குறித்து பிரச்சினை எழுப்பி, பிரதமரையும் சந்தித்து முறையிட்டிருக்கின்றது.
உதாசீனம்
முல்லைப் பெரியாறு பிரச்சினையில், 2006ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றம் தான் அளித்த தீர்ப்பில் அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று அறிவித்தபோதே, கேரள அரசு அதனை ஏற்க மறுத்தது மட்டுமல்லாமல், உச்சநீதிமன்றத் தீர்ப்பையே உதாசீனப்படுத்தும் வகையில் தனது சட்டசபையில் அணைகள் பாதுகாப்புச் சட்டம் எனும் ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்தது.
இங்கேயும் அரசு உள்ளது.. முதல்வரும் இருக்கிறார்
ஆனால் தமிழகத்தின் நிலை என்ன? இங்கேயும் ஒரு அரசு இருக்கிறது. ஒரு முதல்வரும் இருக்கிறார். கேரள முதலமைச்சர், முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் புதிய அணை கட்டுவதே ஒரே தீர்வு என்று சொன்னதற்கு தமிழக அரசின் சார்பில் உடனடியாகப் பதில் கூற வேண்டாமா? முல்லைப் பெரியாறு பிரச்சினை தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடும் லட்சக்கணக்கான மக்களின் குடிநீர்த் தேவையோடும் பின்னிப் பிணைந்ததாயிற்றே என்று கேட்டுள்ளார் கருணாநிதி.