இந்து தலைவர்களை கொலை செய்தவர்கள் உண்மையில் பக்ருதீ்ன் குழுவினர்தானா?.. கருணாநிதி கேள்வி
சென்னை: இந்துத் தலைவர்கள் கொலை வழக்குகளில் உண்மையில் சம்பந்தப்பட்டவர்கள் யார்.. போலீஸ் பக்ருதீன் குழுவினர்தான் இதைச் செய்தனரா.. யார்தான் உண்மையான குற்றவாளிகள்? தமிழக அரசுதான் கூற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
போலீஸ் பக்ருதீன் கைது மற்றும் அவர் மீதான வழக்குகள் தொடர்பாக காவல்துறை அளி்த்து வரும் தகவல்கள், பேட்டிகள் ஆகியவற்றை வைத்து இந்த கேள்வியைக் கட்டுள்ளார் கருணாநிதி.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை...
போலீஸ் பக்ருதீன் குழுவினர்தானா...?
கேள்வி: இந்து இயக்கங்களின் தலைவர் களையெல்லாம் கொலை செய்தது, அண்மையில் பிடிக்கப்பட்ட போலீஸ் பக்ருதீன் குழுவினரா?
கருணாநிதி: ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள் என்பது புரிகிறது. கடந்த சில மாதங்களில் தமிழகத்தில் பா.ஜ.க. வைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள், குறிப்பாக இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் வேலூர் வெள்ளையப்பன், சேலம் ஆடிட்டர் ரமேஷ், தென்காசி யில் குமாரபாண்டியன், டாக்டர் அரவிந்த் ரெட்டி போன்ற வர்கள் கொலை செய்யப்பட்டார்கள். இந்தக் கொலை களில் காவல் துறையினர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பரவலாகப் பேசப்பட்டது.
டிஜிபி அன்று சொன்னது என்ன...?
காவல் துறைக்குப் பொறுப்பேற்றிருக்கும் முதல்வரோ அப்போது கொடநாட்டில் இருந்தார். எனவே போலீஸ் டி.ஜி.பி. ஒரு நீண்ட அறிக்கையினை 27-7-2013 அன்று விடுத்தார். அதில் "23-10-2012 அன்று வேலூரில் பா.ஜ.க. மாநில மருத்துவ அணிச் செயலாளர், மருத்துவர் அரவிந்த ரெட்டி என்பவர் பணப் பரிமாற்றப் பிரச்சினை காரணமாக கொலை செய்யப் பட்டார். இந்த வழக்கில், வேலூரைச் சேர்ந்த வசூர் ராஜா, உதயகுமார், தங்கராஜ், சந்திரன், எம்.எல்.ஏ. ராஜா, பிச்சைப்பெருமாள் மற்றும் தரணிகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார்.
இப்போது சொல்வது என்ன...?
ஆனால் தற்போது தீவிரவாதிகள் சிலரைக் கைது செய்த பிறகு, "போலீசார் நடத்திய விசாரணையில்,பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புப் பிரமுகர்கள் பரமக்குடி முருகன், வேலூரில் டாக்டர் அரவிந்த் ரெட்டி,வெள்ளையப்பன், மதுரையில் சுரேஷ், சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் ஆகிய ஐந்து பேரைக் கொலை செய்ததை போலீஸ் பக்ருதீன் ஒப்புக் கொண்டார்" என்று செய்தி தெரிவித்திருக்கிறார்கள்.
எது உண்மை...?
டாக்டர் அரவிந்த் ரெட்டியைக் கொலை செய்தது, தற்போது கூறுகிற போலீஸ் பக்ருதீனா?அல்லது ஏற்கனவே 27-7-2013 அன்று டி.ஜி.பி. அறிக்கையில் சில பேர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் அறிக்கை விடுத்தாரே; அவர்களா? எது உண்மை? அப்படியென்றால் அவர்கள் மீது போடப்பட்டது ஊரை ஏமாற்றுவதற்காக போடப்பட்ட பொய் வழக்கா?
நல்ல பெயர் எடுப்பதற்காக பலிகடாவா...?
வேலூர் மாவட்டப் போலீசார் இந்த வழக்கை விரைந்து முடித்து, நல்ல பெயர் எடுப்பதற்காக, ரவுடி வசூர் ராஜா உட்பட ஆறு பேரைப் பலிகடா ஆக்கி விட்டதாகவும், அவரை நான்கு நாள் போலீஸ் காவலில் எடுத்து டாக்டர் அரவிந்த் ரெட்டியைக் கொலை செய்ததாக ஒப்புக்கொள்ள வைத்து, வழக்கை முடித்து விட்டதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதிலே எது உண்மை?
உண்மையான குற்றவாளிகள் யார்?
இதுபோலவே, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முருகன் என்பவர் நகர்மன்ற உறுப்பினராக இருந்தார். 19-3-2013இல் அவர் கொலை செய்யப்பட்டார். சொத்து விற்பது தொடர்பான தகராறில் அவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறி, ராஜா முகமது, மனோகரன், சாகுல் ஹமீது, ரபீக் ராஜா ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து, பின்னர் அவர்கள் பிணையில் உள்ளார்கள். இந்த நிலையில் இந்த முருகனைக் கொலை செய்ததும், போலீஸ் பக்ருதீன் குழுவைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்று சொல்லப்படுகிறது. இதில் உண்மையான குற்றவாளிகள் யார்? ராஜா முகமது தரப்பினர் பலிகடா ஆக்கப்பட்டவர்களா?
என்னுடைய சந்தேகம்
என்னுடைய இந்தச் சந்தேகத்தை உறுதி செய்திடும் வகையில், 16-10-2013 தேதிய ஒரு நாளிதழில் ஒரு முழுப் பக்கத்திற்கு "போலீஸ் வழக்குகளும்.... பொலபொலத்துப் போகும் தீர்ப்புகளும்..." என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வந்துள்ளது. அதன் தொடக்கமே, "போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் இவர்களை வளைத்துப் பிடித்துப் பாராட்டு வாங்கியிருக்கும் காவல் துறை, வேலூர் அரவிந்த் ரெட்டி, பரமக்குடி பா.ஜ.க. முன்னாள் கவுன்சிலர் முருகன் கொலை வழக்குகளில் பொய்யான குற்றவாளிகளைக் கணக்குக் காட்டிய குற்றத்துக்கு என்ன பரிகாரம் தேடப்போகிறது எனத் தெரியவில்லை"" என்று எழுதியிருக்கின்றது.
பக்ருதீன் கைது பற்றியும் சந்தேகம் உள்ளது...
போலீஸ் பக்ருதீன் கைது பற்றியும் சந்தேகம் உள்ளது. இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளர், அப்துல் ரஹிம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், போலீஸ் பக்ருதீன் கைதில் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த வழிமுறைகள், பக்ருதீனைக் கைது செய்தபோது பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்தபோது, அட்வகேட் ஜெனரல், 4ஆம் தேதி இரவு சென்னை பெரியமேட்டில் பக்ருதீன் கைது செய்யப்பட்டார் என்றும், சட்டப்படியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.
நான் கேட்ட கேள்விகள்...
சென்னையில், சிறப்புப் புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் லட்சுமணன், ரவீந்திரன் ஆகியோர் திருவல்லிக்கேணியில் பக்ருதீனைக் கண்டுபிடித் தார்கள் என்றும், அவனைப் பின் தொடர்ந்த போலீசார், பெரியமேடு பகுதியில் அவனைப் பிடிக்க முயன்றனர் என்றும், இன்ஸ்பெக்டர் லட்சுமணனைத் தாக்கி விட்டு தப்பியோட முயன்றபோது பெரியமேடு இன்ஸ்பெக்டர் வீரகுமார் பக்ருதீனைப் பிடித்தார் என்றும் செய்தி வந்தது. அதனால்தான் முதல்வர் முதலில் ஒரு சிலருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசும், பதவி உயர்வும் அளித்தபோது, வீரகுமாரைப் போன்றவர்களுக்கு இவைகள் வழங்கப்படவில்லையே என்று நான் கேட்டிருந்தேன். அதன்பிறகு சுமார் 250 பேர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
மொத்தமாக பதவி உயர்வு... உடன்பாடு இல்லை
இவ்வாறு மொத்தமாக பதவி உயர்வு கொடுப்பதில் கூட எனக்கு உடன்பாடு இல்லை. பல ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி அடுத்து நமக்குப் பதவி உயர்வு கிடைக்கும் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது, அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வுக்கு இடைஞ்சலாக திடீரென்று சிலருக்குப் பதவி உயர்வு அரசே அளிக்கின்ற காரணத்தால், பதவி உயர்வுக்காக பல ஆண்டுகளாகக் காத்திருந்தவர்கள் மேலும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒரு சிலர் அதற்குள் பதவி உயர்வு பெறாமலேயே ஓய்வுபெற்றுவிடவும் கூடும். அதைத்தான் நான் "சிலர் பெறுவதோ லாபம்; பலர் தருவதோ சாபம்" என்று எழுதியிருந்தேன்.
அதிமுக அரசின் செயல் வருத்தம் தருகிறது
ஆனால் அ.தி.மு.க. அரசு ஒவ்வொரு முறையும் இவ்வாறு பதவி உயர்வு அளிப்பதாக முடிவு செய்து, பலரை வருத்தமடையச் செய்கிறது. திறமையாகப் பணியாற்றுவோருக்கு உடனடியாக ரொக்கப் பரிசாக அளிப்பதுதான் சரியான முறை.அதையும் ஒட்டுமொத்த மாக ஆய்வு செய்து, அதன் பிறகு அறிவிக்க வேண்டுமே தவிர, அவசரக் கோலத்தில் இன்று 20 பேருக்குப் பரிசளிப்பு, நாளைக்கு 250 பேருக்கு அறிவிப்பு என்பது சரியான முறையாகாது.
உண்மையில் சரணடைந்தாரா பக்ருதீன்?
இந்தக் குறிப்பிட்ட சம்பவத்தில் கூட, போலீஸ் பக்ருதீன், சாகுல் அமீது என்பவர் மூலம் தமிழகம் மற்றும் ஆந்திரப் போலீசாரைத் தொடர்பு கொண்டு, தான் சரணடைய விரும்புவதாகத் தெரிவித்ததாகவும், அந்தத் தகவல் தமிழக உளவுப் பிரிவு போலீசுக்குத் தெரியவந்தது என்றும், அப்போது போலீஸ் பக்ருதீன் போலீஸ் நிலையத்துக்கோ, அதிகாரிகளின் அறைகளுக்கோ வந்து சரணடைய வேண்டாம், பெரியமேட்டுக்கு வரச் சொல்லுங்கள், நாங்கள் கைது செய்கிறோம் என்று கூறினார்கள் என்றும், அவ்வாறே பெரியமேட்டுக்கு வந்த போலீஸ் பக்ருதீன் கைது செய்யப்பட்டதாகவும் ஒரு செய்தி வெளிவந்துள்ளது. போலீஸ் பக்ருதீன் தானாகச் சரணடைந்தாரா? அல்லது போலீசார் சண்டை போட்டுப் பிடித்தார்களா? எது உண்மை?
பக்ருதீன் முகத்தைக் காட்ட மறுத்த போலீஸ்
ஏனென்றால் 18-10-2013 அன்று பக்ருதீனை வேலூரில் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தபோதும், விசாரணை முடிந்து வெளியே அழைத்துச் சென்ற போதும், பத்திரிகையாளர்களைப் பார்த்து ஓங்கிய குரலில், "இந்த வழக்குக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. போலீசார் பொய் வழக்குப் போட்டுள்ளனர். நான் எந்தக் கொலைகளையும் செய்யவில்லை. என் முகத்தில் உள்ள துணியை எடுக்க வேண்டும்"" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
தமிழக அரசு விளக்க வேண்டும்
ஆனால் போலீசார், பக்ருதீன் பத்திரிகையாளர்களிடம் பேசி விடாதபடி, மறைத்து அழைத்துச் சென்றனர் என்று ஏடுகளில் செய்தி வந்துள்ளது. எனவே யார்தான் உண்மையான குற்றவாளிகள்? தமிழக அரசுதான் கூற வேண்டும் என்று கேட்டுள்ளார் கருணாநிதி.