முல்லைப் பெரியாறு விவகாரத்தில் வீண்வம்பை விலைக்கு வாங்கும் பினராயி விஜயன்
கேள்வி :- கேரள மாநில முதலமைச்சர், பினராயி விஜயன், கேரள சட்ட சபையில் கேள்வி ஒன்றுக்குப் பதில் கூறும்போது, "முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதில் கேரள அரசு உறுதியாக உள்ளது" என்று ஏற்கனவே சொன்னதற்கு மாறாக ஒரு கருத்தைக் கூறியிருக்கிறாரே?
பதில்: கேரள மாநிலத்தின் முதலமைச்சராக அவர் பொறுப்பேற்று, டெல்லி சென்றிருந்த போது, செய்தியாளர்களிடம் "தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்ட வேண்டுமென்ற முந்தைய கேரள அரசின் கொள்கையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
முல்லைப் பெரியாறு அணை வலுவுடன் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் அணையைப் பார்வையிட்டு, பல்வேறு ஆய்வுகள் நடத்திய பிறகே அறிக்கை அளித்துள் ளனர். அந்தக் குழுவின் கருத்தை கேரள அரசு ஏற்கிறது. அணை விவகாரத்தில் எவ்வித முரண்பாடுகளையும் கடைப்பிடிக்க நாங்கள் விரும்பவில்லை.
எந்தப் பிரச்சினை ஆனாலும் தமிழக அரசுடன் நேரடியாகவே பேசித் தீர்வு காண்போம்" என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியிருந்தார். உடனடியாக நான் அதை வரவேற்று, மகிழ்ச்சி தெரிவித்திருந்தேன். ஆனால் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள், அவர் டெல்லியிலே தெரிவித்த கருத்துக்கு நேர்மாறாகவும், இரண்டு நாட்களுக்கு முன்பு கூட முல்லைப் பெரியாறுக்கு வந்து ஆய்வு செய்த மத்திய குழு தெரிவித்த கருத்துக்கு எதிராகவும், கேரள சட்டசபையிலே நேற்றுக் கூறியிருப்பது வீண் வம்பை விலை கொடுத்து வாங்குவதற்குச் சமமாகும்.
சமூக முரண்பாடுகள் பற்றியும், பொருளாதார முரண்பாடுகள் பற்றியும் விலாவாரியாக அலசும் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள், கேரள முதலமைச்சர் உருவாக்கியுள்ள இத்தகைய அரசியல் முரண்பாடு குறித்து என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்கள்?