நீதித்துறை குறித்த ரஜினியின் பேச்சு... டைமிங்காக அரசியலாக்கிய கருணாநிதி, ராமதாஸ்!
1996- அரசியல் சூழலுக்குப் பிறகு, ரஜினி என்ற பெயரை தங்களின் விளம்பரத்துக்காக மட்டும் பயன்படுத்திக் கொண்டால் போதும் என்று நினைத்திருந்த அரசியல் தலைவர்கள், இப்போது அவரை மீண்டும் களத்தில் இறக்க பரபரக்கிறார்கள்.
காரணம் ஆயிரம் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும், ஜெயலலிதா மற்றும் அவரது கட்சியின் ஆளுமை இன்னும் அசைக்க முடியாத அளவுக்கு உள்ளது. இதனை அசைக்க இந்த முறை ரஜினியின் இமேஜ் உதவுமா? என்ற யோசனையில் அவர் பெயரை கிடைக்கிற இடைவெளியிலெல்லாம் இழுக்கப் பார்க்கிறார்கள்.
நீதிபதி பிஎஸ் கைலாசத்தின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவில், "அரசியல்வாதிங்க கெட்டுப் போனா கூட நாடு உருப்படும். ஜனங்க கெட்டுப் போனா கூட நாடு உருப்படும். ஆனா நீதிமன்றங்கள் கெட்டுப் போனா மட்டும் நாடு உருப்படாது," என்று பேசியிருந்தார்.
அவர் பேசியது எந்தவித உள்நோக்கம் இல்லாதது. பொதுவானது. அந்த மேடைக்குப் பொருத்தமானதும் கூட. ஆனால் அதை இன்றைய அரசியல் சூழலுக்குகே்ற்ப சாமர்த்தியாகப் பொருத்தி அறிக்கை வெளியிட்டு அரசியலாக்கியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
அவரது அறிக்கையில், "அண்மைக்காலத்தில் நீதிமன்றங்களைப் பற்றியும்,நீதிபதிகளைப் பற்றியும் பரவலாக எதிர்மறைக் கருத்துகள் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் இருந்து வரத் தொடங்கிவிட்டன.
செல்வந்தர்களும், அதிகாரச் செல்வாக்கு மிக்கவர்களும் எதையும் சாதிக்கலாம் என்ற நிலை இருந்து வருகிறது. இதற்கான சான்றுகளும் வளர்ந்து வருகின்றன.
சட்டத்தின் எல்லோரும் சமம் என்பதை சிறிது சிறிதாக நீர்த்துப் போகச் செய்யலாம் என்பன போன்ற கருத்துகள் வேகமாக பரவி வருகின்றன.
இந்த நாளில் ரஜினிகாந்த் வெளிப்படையாக மனம் திறந்து சொல்லி இருக்கும் கருத்து, ஜனநாயகத்துக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்திலும் நம்பிக்கை உள்ள அனைவராலும் வரவேற்கத்தக்கது," என்று குறிப்பிட்டுள்ளார்.
மிக நாசூக்காக அவர் முதல்வரின் சொத்துக் குவிப்பு வழக்கு விவகாரத்தை இதில் தொட்டிருக்கிறார். அது கனிமொழி, ராசா, மாறன்கள் மேலுள்ள வழக்குகளுக்கும் பொருந்தும் என்பது அவருக்குத் தெரியாததல்ல.
இன்னொரு பக்கம் பாமக நிறுவனர் ராமதாஸ். எந்த சினிமா நடிகரின் தயவும், அவர்களால் கிடைக்கும் பப்ளிசிட்டியும் தேவையில்லை என்று சொல்லிவரும் அவர், கடந்த ஒரு வாரத்தில் ரஜினியின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
"மீண்டும் ஜெயலலிதா முதல்வரானால் இந்த நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது," என 1996-ல் இருந்த அரசியல் சூழலை வைத்து ரஜினி சொன்னதை, 2016-ம் ஆண்டு தேர்தலுக்குப் பயன்படுத்தப் பார்க்கிறார். கடந்த வாரம் ரஜினியின் இந்த வரிகளைப் பயன்படுத்தி ஜெயலலிதாவுக்கு எதிராக அறிக்கை விட்டிருந்தார் ராமதாஸ்.
இந்த வாரம் நீதிபதியின் நூற்றாண்டு விழாவில் ரஜினி பேசியதை வைத்து, "நீதிமன்றங்கள் கெட்டுப்போனால் நாடு நன்றாக இருக்காது: ரஜினிகாந்த் - நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு உங்களை கடுமையாக பாதித்திருக்கிறது போலும்!," என்று நேரடியாகவே ஜெயலலிதாவை சம்பந்தப்படுத்தி ட்வீட் செய்துள்ளார்.
1996-ல் அரசியல் அவ்வளவாகப் பிடிபடாமலிருந்தது ரஜினிக்கு. இப்போது ரஜினிக்கு அரசியல் அத்துபடி. அவர் நிலைப்பாடும் தெள்ளத் தெளிவாகிவிட்டது. இந்த அரசியல் தூண்டில்களில் அவர் எந்த வகையிலும் சிக்கிக் கொள்ளமாட்டார் என்பது மட்டும் உறுதி!