ஆசான், நண்பர், பரமவைரிக்கு அருகில் சேருகிறார் கருணாநிதி.. மெரினாவில் உடலடக்கம்!
ஆசான் அண்ணா, நண்பர் எம்ஜிஆர், பரமவைரி ஜெயலலிதாவுக்கு எடுத்ததாக மெரினாவில் கருணாநிதியின் உடலடக்கம் செய்யப்படுகிறது.
Recommended Video
சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே உடலடக்கம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் திராவிட இயக்கத்தில் தன்னுடைய ஆசான், நண்பர் மற்றும் பரமவைரிக்கு அருகில் இடம்பெற உள்ளார் கருணாநிதி.
மிக நீண்ட அரசியல் அனுபவம் உள்ள திமுக கருணாநிதி, தனது வாழ்நாளில் பல தலைவர்களுடன் பழகியுள்ளார். பலருடன் போராடியுள்ளார். இதில் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவை, தனது ஆசானாகக் கருதினார். அண்ணாவின் வழியில் நடக்கும் தம்பியாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு அரசியல் நடத்தினார்.
திமுகவில் இருந்து பிரிந்து சென்ற எம்ஜிஆர், அதிமுக என்ற தனிக்கட்சியை துவக்கினார். அரசியல் ரீதியில் எம்ஜிஆர் மற்றும் கருணாநிதிக்கு இடையே தனிப்பட்ட கருத்து மோதல்கள் இருந்தன. ஆனாலும், இருவரிடம் எப்போதுமே நட்பு இருந்தது.
எம்ஜிஆருக்குப் பிறகு அதிமுகவின் தலைமையையேற்ற ஜெயலலிதா, துவக்கத்தில் இருந்தே திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டார்,. குறிப்பாக கருணாநிதிக்கு எதிராகவே அரசியல் செய்தார். தனிப்பட்ட முறையில் மரியாதை இருந்தாலும், இருவரும் அரசியலில் பரமவைரியாகவே கடைசி வரை இருந்தனர்.
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவைத் தொடர்ந்து, தற்போது கருணாநிதியும் மெரினாவில் உடலடக்கம் செய்யப்பட உள்ளார். தனது ஆசான் அண்ணா, நண்பர் எம்ஜிஆர் மற்றும் பரமவைரியான ஜெயலலிதாவுக்கு அருகில் கருணாநிதியின் உடலடக்கம் செய்யப்பட உள்ளது.
இதில் மற்ற மூவருக்கும் இல்லாத ஒரு பெருமை கருணாநிதிக்கு உண்டு. மற்ற மூவரும் முதல்வராக இருந்தபோது உயிரிழந்து அரசு மரியாதையுடன் இங்கு உடலடக்கம் செய்யப்பட்டனர். ஆனால் ஆட்சியில் இல்லாதபோதும், அரசு மரியாதையுடன் கருணாநிதியுடன் உடலடக்கம் நடக்க உள்ளது.