கருணாநிதிக்கு மவுன அஞ்சலி செலுத்தும் "புதிய தலைமைச் செயலகம்"
கருணாநிதிக்கு மவுன அஞ்சலி செலுத்தும் வகையில் உள்ளது புதிய தலைமை செயலகம்.
சென்னை: தன்னை பார்த்துப் பார்த்துக் கட்டிய திமுக தலைவர் கருணாநிதிக்கு மவுன அஞ்சலி செலுத்தும் வகையில் கருணாநிதி உடல் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் அமைதியாக நிற்கிறது புதிய தலைமை செயலகக் கட்டடம்.
கருணாநிதி முதல்வராக இருந்த 2006-2011-ஆம் ஆண்டு காலகட்டத்தில் புதிய தலைமை செயலகத்தை ஓமந்தூரார் எஸ்டேட்டில் கட்டினார். அந்த கட்டுமானப் பணிகள் நடைபெற்ற போது தினந்தோறும் அங்கு சென்று ஆய்வு நடத்தினார் கருணாநிதி. பார்த்துப் பார்த்து கட்டிய பிரமாண்டம் இந்த புதிய தலைமைச் செயலகம்.
பின்னர் தலைமை செயலகமும், சட்டசபையும் புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. ஆனால் 2011- ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமை செயலகத்தை மீண்டும் ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றினார்.
கருணாநிதி கட்டிய அந்த கட்டடத்தை பல்நோக்கு அரசு மருத்துவமனையாக மாற்றிவிட்டார். இன்று அந்த மருத்துவமனையில் அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த கட்டடத்துக்கு அருகில் உள்ள ராஜாஜி அரங்கத்தில்தான் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
அந்தக் கட்டடத்திற்கு உயிர் இருந்தால், நிச்சயம் தன்னை ரசித்துக் கட்டிய அந்தத் தலைவருக்கு எழுந்து வந்து அந்தக் கட்டடம் அஞ்சலி செலுத்தியிருக்கும்.