தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்!- நெடுமாறன் குறித்து கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள கேள்வி - பதில் பாணி அறிக்கையின் ஒரு பகுதி:
கேள்வி: முள்ளிவாய்க்கால் முற்றம் இடிக்கப்பட்ட சம்பவத்தினையொட்டி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் நெடுமாறன் உட்பட சுமார் 80 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்களே, அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று "டெசோ" சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட வில்லையே?
கலைஞர்: 'டெசோ' சார்பில் நாங்கள் அப்படியொரு தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தால், சிறையில் இருந்து நாங்கள் வெளியே வர மாட்டோம் என்று நெடுமாறன் அறிக்கை விட்டிருப்பார்! அதனால்தான் நாங்கள் அறிக்கை விடவில்லை.
ஏனென்றால், முள்ளிவாய்க்கால் முற்றத் திறப்பு நிகழ்ச்சிக்கு கலைஞருக்கு அழைப்பு அனுப்பப்படுமா என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட நேரத்தில், 'ஈழத் தமிழர் படுகொலைக்குக்காரணமாக இருந்தவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட மாட்டாது' என்று பதிலளித்தவர் பழ.நெடுமாறன். அப்படிப்பட்டவரை விடுவிக்க வேண்டுமென்று நாங்கள் தீர்மானம் நிறைவேற்றினால் ஏற்றுக் கொள்வாரா? நல்ல வேளையாக நீதிமன்றமே அவர்களுக்கு இன்று ஜாமீன் வழங்கிவிட்டது.
மேலும் கொஞ்ச காலமாக அ.தி.மு.க. ஆட்சியை நெடுமாறன் பாராட்டிக் கொண்டுதான் வந்தார். ஆனால் திடீரென்று முள்ளி வாய்க்கால் முற்றம் நிகழ்ச்சிக்குப் பிறகு, அவர் அளித்த பேட்டியில், 'நீதிமன்றத்திலும்,மக்கள் மன்றத்தின் முன்னாலும் முறையிட்டு இந்த அரசின் முகமூடியைக் கிழித்து எறிவோம்; ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக சட்டசபையில் தீர்மானம் போடுவது, அறிக்கைகள் வெளியிடுவது என்பதுபோன்ற நாடகங்களில் முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்; ஆனால் அவருடையவ நெஞ்சம் என்ன என்பதை இந்த இடிப்பு, தகர்ப்பு வேலை நமக்குத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது' என்று கூறியிருக்கிறார்.
"தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்" என்ற பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது!