பெரிய அண்ணன் பாடுவார், அழகிரி டான்ஸ் ஆடுவார்.. குடும்ப உறவுகள் பற்றி நெகிழும் கருணாநிதி மகள் செல்வி
Recommended Video
சென்னை: திமுக தலைவர் மறைந்த கருணாநிதியின் மரணத்தின்போது, அவரது குடும்பத்தினரில், அதிகம் உடைந்து அழுது கொண்டிருந்த ஒரு பெண்மணியை நீங்கள் தொலைக்காட்சி வீடியோக்களில் பார்த்திருப்பீர்கள். அவர்தான், கருணாநிதியின் அன்பு மகள் செல்வி.
கருணாநிதி-தயாளு அம்மாள் தம்பதிகளின் தமிழரசு, அழகிரி, ஸ்டாலின் என்ற ஆண் குழந்தைகளுக்கு மத்தியில் செல்வி ஒரே பெண் பிள்ளையாகும்.
திருவாரூரில் கடந்த சட்டசபை தேர்தலின்போது தந்தைக்காக வீடு வீடாக வாக்கு சேகரித்தது போன்ற ஒரு சில செயல்பாடுகளில் இவர் வெளியுலகிற்கு தெரிந்தாலும் கூட, பேட்டிகள் அளித்தது கிடையாது. தந்தை இறந்த துக்கத்தால் துவண்டு போயுள்ள கருணாநிதி மகள் செல்வி, சன் நியூஸ் தொலைக்காட்சி சேனலுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
செல்வி பேட்டி
தொகுப்பாளரின் கேள்விகளுக்கு, செல்வி அளித்த பதில்களின் தொகுப்பை பார்க்கலாம். "செல்வியை பொறுத்தளவில் கலைஞர் என்றால் என்ன நினைவுக்கு வரும்" என்ற கேள்விக்கு பதிலளித்து அவர் கூறுகையில், "அவரை தெய்வமாக நினைத்துக்கொண்டுள்ளேன். எனது வாயில் வார்த்தைகள் வரவில்லை. மனதே வெறுமையாக உள்ளது" என்றார் செல்வி.
ஸ்டாலின் பெயர்
உங்கள் தந்தை, உங்களை பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளாரா என்ற கேள்விக்கு, "எங்களை பள்ளிக்கு கூட்டி சென்றதில்லை. சர்ச் பார்க் பள்ளியில், என்னையும், ஸ்டாலின் அண்ணனையும் பள்ளியில் சேர்க்க பெரிய அத்தான், கூட்டி சென்றபோது, ஸ்டாலின் என பெயர் இருந்தால் பள்ளியில் சேர்க்க மாட்டோம் என்றனர். அதற்கு எங்கள் அப்பா, அப்படிப்பட்ட பள்ளியில் படிக்க தேவையில்லை என கூறிவிட்டு, அதிக பிரபலம் இல்லாத பள்ளியில் சேர்த்துவிட்டார் என்றார்.
அண்ணன்களின் பாடல், ஆடல்
மதிப்பெண் குறைந்தால் திட்டுவது, அடிப்பது ஏதாவது நடந்துள்ளதா என்ற கேள்விக்கு, அவர் முழு நேர அரசியல்வாதியாக இருந்ததால், அத்தைகள், பெரிய அத்தான் ஆகியோர்தான் இதையெல்லாம் கவனிப்பார்கள். அப்பா பள்ளி விஷயங்களை கவனித்தது இல்லை. ஆனால், இரவு எங்களோடு உட்கார்ந்து கேரம், செஸ் ஆடுவார். பள்ளி விடுமுறை காலத்தில், திருவாரூருக்கு, காரில் கூட்டிச் செல்லுவார்கள். அங்கே குடும்பமாக கூடி இருப்போம். பெரிய அண்ணன் நல்லா பாடுவார், அழகிரி அண்ணன் நல்லா டான்ஸ் ஆடுவார். இப்படி, பாடி ஆடி பொழுதை கழித்துள்ளோம்.
செல்வத்திற்கு செல்வி பிறந்தாச்சு
திருமண வாழ்க்கை குறித்த கேள்விக்கு, புன்முறுவலோடு பதிலை துவங்கினார், செல்வி. நான், பிறந்த உடனே, அப்பா அவரது அக்காவிற்கு அதாவது எனது அத்தைக்கு கடிதம் எழுதினார். அத்தை மகன் பெயர் பன்னீர்செல்வம். "செல்வத்திற்கு, செல்வி பிறந்தாள்" என்று அப்பா கடிதம் போட்டார். குழந்தையிலேயே எனக்கு திருமணம் ஃபிக்ஸ் செய்துவிட்டார்கள் (சிரிக்கிறார்). எனவேதான் செல்வம், செல்வி என பெயரும் அதற்கேற்ப சூட்டப்பட்டது" என்றார்.
கண் கலங்கினாரா
திருமணம் செய்து கொடுக்கும்போது, தந்தை என்ற வகையில் கருணாநிதி கண் கலங்கினாரா, என்ற கேள்விக்கு, அத்தை மகனுக்கே திருமணம் செய்து கொடுத்ததால், ஒரே குடும்பம் என்பதால், அப்படியான சூழல் எழவில்லை என்றார் செல்வி. குடும்பத்தோடு சினிமா பார்க்க சென்றுள்ளீர்களா என்ற கேள்விக்கு,
சினிமாவிற்கு அப்பா, எல்லோரையும் அழைத்து செல்வார். ப்ரீவியோ ஷோவுக்கு யார் அழைத்தாலும் மறுக்க மாட்டார். ஆனால், எனக்கு தெரிந்து அவர் தியேட்டருக்கு சென்றதில்லை. ப்ரீவியோ ஷோவுக்குதான் போயுள்ளார். செஸ், கேரம் போர்டு அதிகம் விளையாடுவார். கேரம்போர்டு அவ்வளவு அழகாக விளையாடுவார். இதுதான் அவரது பொழுது போக்காக இருந்தது என்றார், செல்வி.