நாட்டுக்கே முன்னோடியான சட்டம் போட்டு.. தமிழக பெண்களை தலைநிமிர வைத்தவர் கருணாநிதி!
1929ம் ஆண்டு செங்கல்பட்டு மாநாட்டில் பெண்களுக்கு குடும்பச் சொத்தில் பங்கு தர வேண்டும் என பெரியார் தீர்மானம் நிறைவேற்றியிருந்தார். 1989ல் பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு தர சட்டம் கொண்டுவந்தார் கருணாநித
சென்னை: பெண்களுக்கு ஆண்களுக்கு நிகராக சொத்துரிமை உண்டு என்று சட்டம் இயற்றி நாட்டுக்கே முன்னுதாரணமாக திகழ்ந்தவர் கலைஞர் கருணாநிதி.
ஆண்-பெண் பேதம் இக்காலகட்டத்தில் வேண்டுமானால் குறைந்திருக்கலாம். ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்புகூட நிலைமை இப்படி இல்லை. ஆண்கள் மட்டுமே குடும்ப சொத்துக்கான வாரிசுகளாக இருந்தனர்.
பெண்களும் ஆண்கள் சொத்துதான் என்ற இருமாப்பும் இருந்தது. திருமணம் நடைபெறும்போது பெண் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் சீதனம் எனப்படும் சீர்வரிசை, நகைகள் மட்டுமே அவர்களுக்கு நிதி பாதுகாப்பாக இருந்தது. இருப்பினும் இதை கட்டாயம் இல்லை. அசையா சொத்துக்களில் அவர்களுக்கு பங்கு வழங்குவதே பாதுகாப்பு மற்றும் சம உரிமையான செயல் என்பதில் கருணாநிதி மிகவும் உறுதியாக இருந்தார்.
கருணாநிதி அரசு சட்ட திருத்தம்
இந்து வாரிசுரிமை சட்டம் (தமிழ்நாடு சட்டதிருத்தம்) 1989ன் மூலம் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி. நாட்டிலேயே முதல் முறையாக புரட்சிகரமாக இந்த திட்டத்தை கருணாநிதி அரசு கொண்டு வந்தது. 1929ம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த மாநாட்டில் பெண்களுக்கு குடும்பச் சொத்தில் பங்கு தர வேண்டும் என்ற தீர்மானத்தை பெரியார் நிறைவேற்றியிருந்தார். 60ஆண்டுகள் கழிந்து 1989ல் பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டு என்ற சட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டதன் மூலம், பெரியாரின் கனவை, நனவாக்கிய பெருமையை பெற்றார் கருணாநிதி.
நாட்டுக்கே முன் உதாரணம்
இதை ஏற்றுக்கொண்டு, ஜீரணித்துக்கொண்டு, அதை செயல்படுத்தும் மனது வருவதற்கு மொத்த நாட்டுக்குமே பல வருடங்கள் தேவைப்பட்டன. எனவேதான், இந்திய சொத்துரிமைச் சட்டம் 1956இல் திருத்தங்கள் 2005ல் கொண்டுவரப்பட்டன. அதாவது தமிழகம் சட்டம் இயற்றிய சுமார் 16 வருடங்கள் கழித்துதான், தேசிய அளவில் அந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.
உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு
இதேபோல, உள்ளாட்சித் தேர்தலில் 33 சதவிகித இடஒதுக்கீடு அளித்தது, அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவிகித ஒதுக்கீடு தந்தது மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை பெற்றுத் தந்தது உள்ளிட்டவை தமிழகத்தில் திமுக ஆட்சி காலத்தில் சட்டமாக்கி நிறைவேற்றப்பட்ட சில முக்கியமான பெண்கள் நலன் சார்ந்த மேம்பாட்டு நடவடிக்கைகள்.
அரசு பணிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு
1989இல் இந்தியாவிலேயே முதல் முறையாக அரசுப் பணிகளில், வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் திமுக ஆட்சியில்தான் நடைமுறைப் படுத்தப்பட்டு, பல்லாயிரக்கணக்கான பெண்கள் அரசு வேலை வாய்ப்புகள் பெற வழிவகுக்கப்பட்டது. மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர்க்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 6 மாநகராட்சிகள், 104 நகராட்சிகள், 635 பேரூராட்சிகள், 12,584 ஊராட்சிகள் ஆகியவற்றுக்கு 1996ஆம் ஆண்டு அக்டோபரில் 9 மற்றும் 12ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்துவதென்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
முதல் உள்ளாட்சி தேர்தல்
இந்தத் தேர்தலில் முக்கியமான அம்சம் என்னவென்றால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்களில் முதல் முறையாக பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டதுதான். மொத்தமுள்ள ஆறு மாநகராட்சிகளில் திருச்சி மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது.
ஒவ்வொரு பதவியிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு
மொத்தம் 474 மாநகராட்சி வார்டுகளில் பெண்களுக்கு 161 என்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 35 என்றும் - மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகள் மொத்தம் 28இல் பெண்களுக்கு 10 என்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 4 என்றும் - மாவட்டப் பஞ்சாயத்து வார்டுகள் பதவிகள் மொத்தம் 649இல் பெண்களுக்கு 242 என்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 97 என்றும் - நகராட்சித் தலைவர்கள் பதவிகள் மொத்தம் 106இல் பெண்களுக்கு 35 என்றும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 6 என்றும் இப்படியே ஒவ்வொரு பதவியிலும் பெண்களுக்கு 33 சதவிகிதம் என்ற அளவிற்கு தொகுதிகள் பிரிக்கப்பட்டன. இப்படி பெண்ணாக பிறந்து ஆட்சி செய்தவர்களே செய்ய முடியாத சாதனைகளை கூட, பெண்களுக்காக செய்தவர் கருணாநிதி.